மான்செஸ்டர்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. வழக்கமாக இங்கிலாந்து அணியே முதல் நாளில் தங்களது பிளேயிங் லெவனை அறிவித்து வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியும் பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.
ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்ற 3வது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணிக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2 போட்டிகளை வென்று ஆஷஸ் தொடரை கைப்பற்ற முனைப்புடன் இருக்கிறது. தோல்விகள் வரும் போதே பேஸ்பால் திட்டத்தில் இருந்து பின்வாங்காத பென் ஸ்டோக்ஸ், கடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், பேஸ்பால் திட்டத்துடனே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

அதேபோல் 3வது போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா 4வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் மார்க் வுட் மற்றும் வோக்ஸ் ஆகியோரின் எதிர்பாராத தாக்குதலால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் அவர்களை எதிர்க்க சரியான திட்டத்துடன் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நேதன் லயன் காயம் காரணமாக விலகியதால், டாட் மர்ஃபி களமிறக்கப்பட்டார். அவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததால், 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஸ்பின்னர்களே இல்லாமல் இரு ஆல் ரவுண்டர்களான க்ரீன் மற்றும் மார்ஷை பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளது. அதேபோல் கடந்த போட்டியில் விளையாடிய போலாந்த் நீக்கப்பட்டு ஹேசல்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மொயின் அலிய 3வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் ஆண்டர்சன் கில்லி என்பதால், ராபின்சன் நீக்கப்பட்டு ஆண்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னருடன் பென் ஸ்டோக்ஸும் இருக்கிறார். இதனால் இங்கிலாந்து அணியின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.