பர்மிங்காம் : ஆஷஸ் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நேற்று முடிவடைந்து விட்டது. இதில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.
எனினும் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது. நேற்றைய ஆட்டத்தில் ஒரு போட்டியாளர் தோற்று இருந்தாலும் வென்றது கிரிக்கெட்டாக அமைந்தது.
ஏனென்றால் டி20 போட்டியை கூட ரசிகர்கள் இந்த அளவிற்கு எதிர்பார்ப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் உயிரைக் கொடுத்து இரு அணி வீரர்களும் விளையாடியது வேஸ்ட் ஆக போய்விட்டது என தகவல் வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு டாப் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி தான் செல்ல முடியும்.

இதனால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. டிராவை விட வெற்றி தான் தேவை என்பதால் ஒவ்வொரு அணிகளும் கடுமையாக போராடுகிறது. இந்த நிலையில் ஆசஸ் முதல் டெஸ்ட் போட்டியில் நிர்ணயித்த நேரத்தை விட குறைவான ஓவரை வீசியதாக கூறி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நின்றிருந்தால் கூட பரவாயில்லையே. இரண்டு அணிகளுக்குமே தலா இரண்டு புள்ளிகளை ஐசிசி குறைத்திருக்கிறது. மேலும் இரண்டு அணி கேப்டனுக்கு கூடுதலாக 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் முதல் நாளில் வெறும் 82 ஓவர்கள் மட்டும்தான் வீசப்பட்டிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 78 ஓவர்களை வீசி இருக்கிறது. இங்கிலாந்து அணி டிக்ளர் செய்த உடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து 4 ஓவர்கள் வீசி இருக்கிறது.
இரண்டாவது நாளில் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி இங்கிலாந்து அணி 90 வரையும் வீசி இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அந்த நாட்களில் இங்கிலாந்து அணி பந்து வீசும் போது குறைந்த அளவிலே ஓவர்களை வீசி இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டதை அடுத்து இங்கிலாந்து அணி மைனஸ் 2 புள்ளிகள் உடனும், ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகள் உடனும் இருக்கிறது.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட குறைந்த ஓவர்களை வீசியதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு 80 சதவீதம் போட்டி ஊதியத்திலிருந்து அபராதம் விதிக்கப்பட்டது. 2021 இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்று இருக்க வேண்டியது. ஆனால் சவுத்தாம்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே போன்று குறைந்த ஓவர்களை வீசி மைனஸ் இரண்டு புள்ளிகளை ஆஸ்திரேலியா பெற்றதால் அவர்களுடைய இறுதி போட்டி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.