லீட்ஸ்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 171 ரன்கள் எடுத்திருந்த போது 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னில்லையில் உள்ளது. இன்னும் ஒரேயொரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும், ஆஸ்திரேலிய அணியின் பாடு திண்டாட்டம் தான்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் பேட் கம்மின்ஸ் எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசினார். ஆனால் லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் மாற்றத்தை கொண்டு வருவார் என்று சேர்க்கப்பட்ட ஸ்காட் போலாந்த் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததே ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் வெறும் 105 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஸ்காட் போலாந்த். ஆனால் ஆஷஸ் தொடரில் நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் 2ல் ஆடியுள்ள போலாந்த் 231 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். ஏற்கனவே நேதன் லயன் காயம் காரணமாக விலகியதால், டாட் மர்ஃபியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 3வது ஆஷஸ் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட போலாந்த் வீழ்த்தவில்லை. கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் மட்டுமே அட்டாக் மேல் அட்டாக் செய்த நிலையில், போலாந்த் இன்னும் சற்று உதவி இருந்தால், ஆஸ்திரேலிய அணியால் எளிதாக வென்று சாதனை படைத்திருக்க முடியும். இதே இடத்தில் ஹேசல்வுட் போன்ற பந்துவீச்சாளர் விளையாடி இருந்தால், நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். இதனால் 4வது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஹேசல்வுட்டை களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.