மெல்போர்ன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் உலகின் பல நூறு ஆண்டு கால சாதனைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. வெறும் 2 நாட்களில் முடிந்த இந்தப் போட்டியில் வரலாற்றில் இல்லாத மூன்று சாதனைகள் அரங்கேறின.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் (MCG) நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது கடந்த 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெறும் முதல் டெஸ்ட் வெற்றியாகும். இந்தப் போட்டியில் நடந்த அந்த மூன்று வரலாற்று சாதனைகள்-

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு டெஸ்ட் போட்டி முழுவதும் ஒரு ஓவர் கூட சுழற்பந்து (Spin) வீசப்படவில்லை. வழக்கமாக ஆஸ்திரேலியா மைதானங்களில் நாதன் லியோன் போன்ற ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால், மெல்போர்ன் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததால், இரண்டு அணி கேப்டன்களும் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தவே இல்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு ஸ்பின்னர் கூட பந்துவீசாதது இதுவே முதல் முறை.
பேட்ஸ்மேன்களுக்கு இது ஒரு மோசமான போட்டியாக அமைந்தது. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 36 விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால், இரு அணிகளிலும் உள்ள ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் (50 ரன்கள்) அடிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த 46 ரன்கள் தான் இந்த ஒட்டுமொத்த போட்டியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர். கடைசியாக 1932-ம் ஆண்டு இதே மெல்போர்ன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த வகையில், 93 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் அரைசதம் அடிக்காத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பொதுவாக டெஸ்ட் போட்டி 5 நாட்கள் நடக்கும். ஆனால், இந்த ஆஷஸ் தொடரில் பெர்த் டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்தது. இப்போது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்துவிட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஒரு டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் 2 நாட்களுக்குள் முடிவது கடந்த 129 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
பிட்ச் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு இது ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது. 2011-ம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 15 ஆண்டுகள் கழித்து, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து. 175 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து, ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தங்களது மானத்தைக் காப்பாற்றிக்கொண்டது.