லண்டன்: "கடந்த 3 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு திமிர் அதிகமாகிவிட்டது. இப்போது ஆஸ்திரேலியர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இது மிகப்பெரிய அவமானம்" என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், தனது சொந்த அணியின் மோசமான ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமாக சொதப்பி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்து பரிதாப நிலையில் உள்ளது.

இந்தத் தோல்வி குறித்து 'தி டெலிகிராப்' பத்திரிகையில் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார் மைக்கேல் வாகன். அவர் எழுதியிருப்பதாவது: "இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகவே இங்கிலாந்து அணிக்கு ஒருவித தலைக்கனம் வந்துவிட்டது. 'நாங்கள் தான் பெரிய ஆட்கள்' என்பது போலச் சுற்றி வந்தார்கள். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், இங்கிலாந்து அணியின் வாயை யாராவது மூட வைக்க வேண்டும் என்று காத்திருந்தார்கள். அது இப்போது நடந்துவிட்டது.
ஆஸ்திரேலிய வீரர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இவ்வளவு திறமையான வீரர்கள் இருந்தும், ஒரு அணி இவ்வளவு பலவீனமாக எப்படிச் சரணடைய முடியும் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக, 'இந்த அதிரடி பாணி ஆஸ்திரேலியாவில் எடுபடும்' என்று சும்மா உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆஸ்திரேலியாவில் ஜெயிக்க வேண்டும் என்றால், களத்தில் நின்று கடினமாக உழைக்க வேண்டும். பந்துவீச்சில் ஒழுக்கம் வேண்டும். ஆனால் நம்மிடம் இது எதுவுமே இல்லை. வெறும் 11 நாட்களுக்குள் ஆஷஸ் தொடரை இழந்திருக்கிறோம். எனக்குத் தெரிந்தவரை இதுதான் மிக மோசமான தோல்வி."
இவ்வாறு வாகன் தனது கட்டுரையில் இங்கிலாந்து அணியை வறுத்தெடுத்துள்ளார். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.