பெர்த்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் வெற்றி தோல்விகளைத் தாண்டி, ஆஸ்திரேலிய அணி 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரே போட்டியில் இரண்டு பூர்வகுடி வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் மற்றும் இன்று அறிமுகமான வேகப் பந்துவீச்சாளர் பிரெண்டன் டாக்கெட் (Brendan Doggett) ஆகியோர் இணைந்து களமிறங்கியதன் மூலம் இந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியுள்ளது.

1877-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதிலிருந்து, ஆஸ்திரேலியா இதுவரை ஒரே பிளேயிங் லெவனில் இரண்டு பூர்வகுடி வீரர்களைக் களமிறக்கியதில்லை. இன்று பெர்த்தில் நடக்கும் போட்டியில் அந்த நீண்ட காலத் தடை உடைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பூர்வகுடி வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. மறைந்த பெய்த் கோல்டார்ட் (பெண்கள் கிரிக்கெட்), புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி, தற்போதைய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் மட்டுமே அந்தப் பெருமையைப் பெற்றிருந்தனர். தற்போது பிரெண்டன் டாக்கெட் அந்த வரிசையில் ஐந்தாவது வீரராக இணைந்துள்ளார்.
வழக்கமான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார். கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இல்லாத நிலையில், இந்த புதிய வேகப்பந்து வீச்சுக் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க் விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்குச் சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் தான் வீசிய முதல் 5 ஓவர்களில் 3 விக்கெட்களை சாய்த்தார். இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர்களான கிராவ்லி மற்றும் ஜோ ரூட் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.