பிரிஸ்பேன்: ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் எடுத்த ஒரு சர்ச்சைக்குரிய முடிவு, அந்த அணிக்கே வினையாக முடிந்துள்ளது. பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பதால், அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோனை கழட்டிவிட்டு, 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் இந்தத் தவறான முடிவே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கக் காரணமாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் சாக் கிராவ்லி 76 ரன்கள் குவித்தார். அவர் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை விமர்சித்துள்ளார். "டாஸ் போடும்போது அணியில் நாதன் லியோன் பெயர் இல்லாததைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அவர் இல்லாதது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது."
"எதிரணியில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாததால், தொடர்ந்து ஒரே மாதிரியான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எனக்கு எளிதாக இருந்தது. பந்துவீச்சில் எந்தவிதமான மாறுபாடும் இல்லாததால், என்னால் எளிதாக ஒரு ரிதத்தை பிடிக்க முடிந்தது. ஆட்டம் செல்லச் செல்ல பேட்டிங் செய்வது இன்னும் எளிதானது" என்று கிராவ்லி வெளிப்படையாகக் கூறினார்.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு, சொந்த மண்ணில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் நாதன் லியோன் நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் இந்தத் தகவல் அவருக்குச் சொல்லப்பட்டதாகவும், இதனால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டார். மற்றவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. லியோனுக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட மைக்கேல் நேசர் மற்றும் பிற வேகப்பந்து வீச்சாளர்களான கேமரூன் கிரீன், ஸ்காட் போலண்ட், பிரெண்டன் டாக்கெட் ஆகியோர் சேர்ந்து 249 ரன்களை வாரி வழங்கி, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர்.
ஸ்பின்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 8 ஓவர்கள் பின்தங்கியுள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பாதிக்கலாம். ஒவ்வொரு கூடுதல் நேரம் எடுக்கப்பட்ட ஓவருக்கும் புள்ளிகள் குறைக்கப்படும் என்பதால் இது ஆஸ்திரேலியாவுக்கு மற்றொரு தலைவலியாக மாறி உள்ளது.
மேலும், பந்து பழையதான பிறகு விக்கெட் வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது. கடைசி விக்கெட்டுக்கு ஜோ ரூட் மற்றும் ஆர்ச்சர் ஜோடி 61 ரன்கள் சேர்த்ததை 5 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தும் ஆஸ்திரேலியாவால் உடைக்க முடியவில்லை. "சொந்த செலவில் சூனியம் வைப்பது" போல, ஆஸ்திரேலியா எடுத்த இந்த முடிவு அவர்களுக்கே பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.