மெல்போர்ன்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற 2025 ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக மாறியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 2011 ஜனவரி மாதத்திற்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்து இருந்தது. இந்த நிலையில், போட்டி இரண்டாவது நாளே முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, இந்த முறை ஆஷஸ் தொடரை இழந்ததற்கு ஆறுதல் வெற்றியைத் தேடிக்கொண்டது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 152, இங்கிலாந்து 110 என சுருண்ட நிலையில், 42 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கியது. "பெரிய ஸ்கோர் அடித்து இங்கிலாந்தை நசுக்குவார்கள்" என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் மட்டும் தனி ஆளாகப் போராடி 46 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஸ்டீவ் ஸ்மித் (24), கிரீன் (19) என யாரும் நிலைக்கவில்லை. இறுதியில் 34.3 ஓவர்களில் வெறும் 132 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது. கார்ஸ் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஒன்றரை நாட்களில் 30 விக்கெட்டுகள் விழுந்த அந்த மோசமான பிட்சில், 175 ரன்கள் என்பது இமாலய இலக்கு என்ற நிலையே இருந்தது. ஆனால், இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 37 ரன்கள் மற்றும் பென் டக்கெட் 34 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 6.6 ஓவரில் 51 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி பிரிந்ததும், ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது.
மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து அணி பதற்றத்தில் ஆழ்ந்தது. ஜோ ரூட் 15 ரன்களிலும், கேப்டன் ஸ்டோக்ஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, 6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. ஆனாலும், வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் வேகமாக குறைந்தது.
இறுதியில் ஹாரி புரூக் (18*) மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் (3*) ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 32.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து.
ஏற்கெனவே 2025 ஆஷஸ் தொடரை 0 - 3 என இங்கிலாந்து அணி இழந்திருந்தாலும், மெல்போர்ன் போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில், அதுவும் ஆஸ்திரேலியாவை 2 நாட்களுக்குள் வீழ்த்தியது மிகப்பெரிய ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்த ஜோஷ் டங் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் மிரட்டிய பிரைடன் கார்ஸ் ஆகியோர் இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள். சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான பிட்சை தயார் செய்து, அதில் தானே தோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா.