சிட்னி: 2025-26 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது. 2011-க்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஜெயித்து விட்டோம் என இங்கிலாந்து ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.
ஆனால், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், "இந்த வெற்றியை எல்லாம் பெருசா கொண்டாடாதீங்க, இது லாட்டரி அடிச்ச மாதிரி" என்று கூறி இங்கிலாந்து நிர்வாகத்தை வறுத்தெடுத்துள்ளார். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி வெறும் இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சொர்க்கபுரியாக இருந்ததால், 36 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே அள்ளினர். இதில் இங்கிலாந்தின் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார்.

இதுபற்றி பேசிய மைக்கேல் வான், "ஜெயித்தது மகிழ்ச்சி தான். ஆனால் உண்மைய சொல்ல வேண்டும் என்றால் மெல்போர்ன் வெற்றி ஒரு லாட்டரி. இது ஒரு முழுமையான டெஸ்ட் போட்டி கிடையாது. ஆடுகளம் அப்படி இருந்தது. இதை வைத்துக்கொண்டு நாம் சாதித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது," என்று பேசியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரின் 'பாஸ்பால்' அணுகுமுறை மீது ஏற்கனவே விமர்சனங்கள் உள்ளது. இந்நிலையில், அடுத்து சிட்னியில் நடக்கப்போகும் கடைசி டெஸ்ட் போட்டி இவர்களுக்கு வாழ்வா, சாவா போராட்டம் என்று வான் எச்சரித்துள்ளார்.
"சிட்னியில் நடக்கும் போட்டி மிக முக்கியமானது. அங்கே ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜெயிக்க வேண்டும். அது இரண்டு நாள் போட்டியாக இருக்கக்கூடாது. ஒருவேளை சிட்னியில் இங்கிலாந்து அணி மோசமாக அடிவாங்கினால், நிர்வாகத்தில் கடுமையான மாற்றங்கள் தேவைப்படும். மெக்கல்லம் மற்றும் ஸ்டோக்ஸ் மீது நிர்வாகத்திற்கு நம்பிக்கை இருந்தாலும், இன்னொரு மோசமான தோல்வி பெரிய கேள்விகளை எழுப்பும்" என்று அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து வீரர்கள் அடிக்கடி "நாங்க துரதிர்ஷ்டவசமா தோற்று விட்டோம்", "நேரம் சரியில்லை" என்று கூறுவதை வான் கடுமையாக சாடியுள்ளார். "எப்போதும் அதிர்ஷ்டத்தை குறை சொல்வதை நிறுத்துங்கள். எங்கே தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். முதிர்ச்சியுடன் விளையாடப் பழகுங்கள். அப்படி செய்தால்தான் இந்த நிர்வாகம் தொடர்ந்து நீடிக்க முடியும்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.