மெல்போர்ன்: இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வந்தாலோ, முதல் நாள் அன்றே பந்து ஸ்பின் ஆனாலோ, 'டெஸ்ட் கிரிக்கெட்டே அழிந்து விட்டது' என்று புலம்பும் வெளிநாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், இப்போது ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஒன்றரை நாட்களில் போட்டி முடிவுக்கு வந்ததை பற்றி யாருக்கும் வலிக்காமல், லேசாக விமர்சித்து இருக்கிறார்கள்.
ஒரு மாதத்துக்கு முன் கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய டெஸ்ட் போட்டி நினைவிருக்கிறதா? இரண்டரை நாளில் அந்தப் போட்டி முடிவுக்கு வந்தது. உடனே, "ஐயோ, இது என்ன பிட்ச்? முதல் நாளே பந்து இப்படி திரும்புதே? இது கிரிக்கெட்டுக்கே கேவலம்" என இங்கிலாந்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் வரிசுகட்டி வந்து விமர்சனம் செய்தனர். ஆனால், இப்போது மெல்போர்னில் என்ன நடந்திருக்கிறது?

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தன. இரண்டாவது நாளில் 16 விக்கெட்டுகள் விழுந்து, மொத்த போட்டியே இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பெர்த் டெஸ்ட்டும் இப்படித்தான் இரண்டு நாளில் முடிந்தது. இப்போது மெல்போர்னும் அதே கதைதான். ஆனால், இந்தியாவுக்கு எதிராகக் குரல் கொடுத்த அந்த 'மகான்கள்' எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்பதுதான் ரசிகர்களின் கேள்வி.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் விமர்சகர்களை வெளுத்து வாங்கியுள்ளார். "இந்தியாவில் ஒரு நாளில் 15 விக்கெட் விழுந்தா, 'முதல் நாளே பந்து திரும்பக்கூடாது'னு அறிவுரை கூறுகிறீர்கள். அப்போ ஆஸ்திரேலியாவில் மட்டும் பந்து தாறுமாறா ஸ்விங் ஆகுதே... அது மட்டும் நியாயமா?
நீங்கள் ஆஸ்திரேலிய பிட்ச் பற்றி புகார் சொல்லவில்லை என்றால், இந்தியாவில் பந்து திரும்பும்போதும் புகார் சொல்லக்கூடாது. பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கணும். இது அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு" என்று நச் பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏற்கனவே ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வென்றுவிட்டது. அப்புறம் எதற்காகப் பிட்சில் 10 மி.மீ அளவுக்குப் புற்களை விட வேண்டும்? 5 மி.மீ விட்டிருந்தாலே போட்டி 4 அல்லது 5 நாட்கள் வரை சென்றிருக்கும். இப்படி 2 நாளில் போட்டி முடிவது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தையே குறைக்கிறது" என்று ஆஸ்திரேலிய நிர்வாகத்தையும் சாடியுள்ளார்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளில் போட்டி 3 நாளில் முடிந்தால், ஐசிசி வரை புகார் செல்கிறது. பிட்ச் 'மோசம்' என தரவரிசை அளிக்கப்பட்டு முத்திரை குத்தப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் போட்டி 2 நாளில் முடிந்தால், அது 'விறுவிறுப்பான போட்டி' என்று வர்ணிக்கப்படுகிறது.
"ஸ்பின்னுக்கு சப்போர்ட் பண்ணா தப்பு... ஆனா ஃபாஸ்ட் பவுலிங்குக்கு சப்போர்ட் பண்ணா மட்டும் சரியா?" என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ஆவேசமாக எழுப்பி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) நடக்கும் இந்தக் காலத்தில், ஒவ்வொரு நாடும் தங்களுக்குச் சாதகமாக பிட்ச் அமைத்துக்கொள்வதைத் தடுக்க, ஐசிசி இனி பிட்ச் விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.