மெல்போர்ன்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் 2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான மெல்போர்ன் மைதானத்தின் தரத்தைப் பார்த்து பொங்கி எழுந்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட்.
மெல்போர்ன் மைதானத்தில் (MCG) நேற்று தொடங்கிய ஆஷஸ் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் உலகையே உற்று நோக்க வைத்துள்ளது. காரணம், பேட்ஸ்மேன்கள் ஆடுகிறார்களா இல்லை மைதானத்திற்கு வந்து செல்கிறார்களா என்றே தெரியாத அளவுக்கு விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன.

பச்சைப்பசேலென இருந்த அந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்குச் சுருண்டது. பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, அதைவிட மோசமாக 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் (ஆஸ்திரேலியா 10 + இங்கிலாந்து 10) விழுந்தது ரசிகர்களை மட்டுமல்ல, முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் 74 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாளில் 20 விக்கெட்டுகள் விழுவது இதுவே முதல் முறை. மெல்போர்னில் 123 ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்த போட்டிக்கான பிட்ச் குறித்து இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தற்போது வர்ணனையாளராகச் செயல்படும் ஸ்டூவர்ட் பிராட், மெல்போர்ன் ஆடுகளத்தை கடுமையாகச் சாடியுள்ளார். "இந்த பிட்சில் பந்து திரும்பும் விதத்தைப் பார்த்தால், இங்கே ஏதோ பெரிய தவறு இருக்கிறது என்றே தோன்றுகிறது.
சர்வதேசத் தரம் வாய்ந்த டெஸ்ட் பவுலர்களுக்கு, விக்கெட் எடுக்க பிட்ச்சிலிருந்து இந்த அளவுக்கான உதவி தேவையே இல்லை. ஒரு நல்ல டெஸ்ட் பிட்ச் என்றால் அதில் பவுன்ஸ் இருக்க வேண்டும். ஆனால், இப்படி அளவுக்கு அதிகமாகப் பந்து ஸ்விங் ஆகவும், திரும்பவும் கூடாது. இது பேட்ஸ்மேன்களுக்குச் செய்யும் துரோகம்" என வெளிப்படையாகவே தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
பிராட்டின் கருத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானும் வழிமொழிந்துள்ளார். "மைதானத்தில் 94,199 ரசிகர்கள் திரண்டிருந்தது சாதனைதான். அவர்கள் நிச்சயம் மகிழ்ந்து இருப்பார்கள். ஆனால், கிரிக்கெட் என்று வரும்போது பேட் மற்றும் பந்துக்கு இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் அது சுத்தமாக இல்லை. இது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அநியாயமான ஒரு சூழல். இப்படி ஒரு ஆடுகளத்தில் நடப்பது உண்மையான டெஸ்ட் கிரிக்கெட்டே இல்லை" என அவரும் தன் பங்குக்குத் விமர்சனம் செய்து இருக்கிறார்.