லண்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் குறித்து தெரிவித்த கிண்டலான கருத்துக்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் சக வீரரான மொயீன் அலி தக்க பதிலடி கொடுத்துள்ளார். "வார்னர் ஒரு கோமாளி! அவருடைய வார்த்தைகள் ரூட்டை ஒருபோதும் பாதிக்காது" என்று மொயீன் அலி பதிலடியாக கூறியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள ஆஷஸ் தொடருக்கு முன்னதாக, டேவிட் வார்னர், "ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டால் சதம் அடிக்கவே முடியவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை நினைத்து அவருக்கு நிச்சயம் கெட்ட கனவுகள் வரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஜோ ரூட்டின் பேட்டிங் நுட்பம் அவருக்கு எதிராகவே திரும்பும், இதை நான் முன்பே பார்த்திருக்கிறேன்" என்றும் கூறியிருந்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் கிரிக்கெட்டில் பகையாளிகளாக இருக்கும் நிலையில் இந்த கருத்து இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரவியது.

டேவிட் வார்னரின் இந்த கருத்துக்கு பதிலளித்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, "இது வார்னரின் வழக்கம். அவர் ஒரு கோமாளி. ஜோ ரூட்டின் மன உறுதியைக் குலைக்க அவர் முயற்சி செய்கிறார், ஆனால் அது ஒருபோதும் நடக்காது. ஜோ ரூட் இதுபோன்ற வார்த்தைப் போர்களில் ஈடுபட மாட்டார்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜோ ரூட் இப்போது ஏராளமான ரன்களைக் குவித்துள்ளார். அவரைப் பல அணிகள் சீண்டிப் பார்த்துள்ளன. இந்திய அணி கூட முயற்சித்தது, ஆனால் அது பலனளிக்கவில்லை. ஏனென்றால், அந்தத் தொடரில் அவர் அதிக ரன்களைக் குவித்தார். சில வீரர்களை இப்படிச் சீண்டலாம். ஆனால், ஜோ ரூட் போன்ற வீரர்களிடம் அது எடுபடாது" என்று தெரிவித்தார்.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்து முடிந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் 537 ரன்கள் குவித்து, தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதில் மூன்று சதங்களும் அடங்கும்.
இந்த அபாரமான ஃபார்ம், வார்னரின் கருத்துக்கு மாறாக, ஜோ ரூட் நல்ல நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. கிரிக்கெட் உலகில் இதுபோன்ற வார்த்தைப் போர்கள் புதிதல்ல என்றாலும், ஆஷஸ் தொடருக்கு முன்பாகவே தொடங்கியுள்ள இந்த மோதல், 2025 ஆஷஸ் தொடரின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.