சிட்னி: 2025-26 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியில் முக்கிய மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜனவரி 4 முதல் 8 வரை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சூழலில் 4வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது, அந்த நாட்டு ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. கிரீனின் அண்மைய ஆட்டம் திருப்திகரமாக இல்லாதது இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா அணியால் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கிரீன் ஏலம் எடுக்கப்பட்டார். இதனால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் இந்த ஆஷஸ் தொடரில் நான்கு போட்டிகளில் வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிரீனுக்கு பதிலாக, மற்றொரு ஆல்ரவுண்டர் பீயூ வெப்ஸ்டருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. இந்த நான்கு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளிலும் வெப்ஸ்டர் பெஞ்சில் அமர்ந்தே இருந்தார்.
பீயூ வெப்ஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குப் புதியவர் அல்ல. அவர் ஆஸ்திரேலியாவுக்காக ஜனவரி 2025-ல் சிட்னி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட், லார்ட்ஸில் நடந்த 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, மேற்கிந்தியத் தீவுகளில் மூன்று டெஸ்ட்களிலும் பங்கேற்றுள்ளார்.வெப்ஸ்டருடன், சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பியையும் சிட்னியில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டிக்கு ஆஸ்திரேலியா பரிசீலித்து வருகிறது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய மெக்டொனால்ட், "இது ஒரு இனிமையான பிரச்சனை மக்கள் தேர்வு குறித்துப் பேசுவார்கள். கேமரூன் (கிரீன்) இப்போது எந்த நிலையில் உள்ளார், எந்த இடத்தில் பொருந்துவார் என்பது விவாதிக்கப்படும்.
எங்களிடம் ஒரு தரமான வீரர் (வெப்ஸ்டர்) காத்திருக்கிறார் என்பது தெரியும். எங்கள் பேட்டிங் வரிசை இன்னும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று நினைக்கிறோம். சிட்னிக்கு முன் இது குறித்து ஆலோசிப்போம். ஒரு ஸ்பின் பவுலரை எடுக்காமல் இருப்பது எங்களுக்குக் கடினமானது, அந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்" டாட் (மர்பி) என்ன வழங்குகிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். அவர் முகாமிற்கு வந்தபோது நாங்கள் பார்த்த செயல்பாடு சிறப்பாக இருந்தது. நாங்கள் அவரைத் தேர்வு செய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.