மும்பை: பாரம்பரியமிக்க ஆசஸ் கிரிக்கெட் தொடரில் எப்போதுமே சர்ச்சைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். சில சம்பவங்கள் களத்திற்கு உள்ளேவும், சில சம்பவங்கள் களத்திற்கு வெளியேவும் நடைபெறும்.
இதனால் எப்போதுமே ஆசஸ் தொடர் மீது ரசிகர்களின் கவனம் இருக்கும். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.

அசஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை மூன்றாவது டெஸ்ட் வெற்றி அல்லது டிரா செய்தாலே ஆசஸ் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும். இதனால் மூன்றாவது போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், தாங்கள் இந்த போட்டிகளுக்காக அளவுக்கு அதிகமாக தயாராகி விட்டோம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியிருந்தார். இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டுக்கு இடைப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் நூசா என்ற இடத்திற்கு விடுமுறையை கழிக்க சென்றனர்.
விடுமுறையை முடித்துவிட்டு பிரிஸ்பேனில் இருந்து அடிபெய்டில் விமானம் மூலம் செல்வதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் வந்தனர். அப்போது ஆஸ்திரேலியாவின் சேனல் 7 டிவியின் கேமரா மேன், இங்கிலாந்து அணியினரின் முகத்திற்கு நேராக கேமராவை கொண்டு சென்றார். அப்போது இங்கிலாந்து அணியின் பாதுகாவலர் கேமரா மேனை பிடித்து தள்ளியதாக தெரிகிறது.
அந்த வீடியோவில், என் முகத்திற்கு நேராக கொண்டு வராதே நகர்ந்து செல். ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கூறிக்கொண்டு பாதுகாவலர் கேமராமேனை தள்ளுகிறார். இதற்கு அந்த கேமராமேன், நீ என்னை அடிக்கிறாய் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்து அணி இது தொடர்பாக எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் முறைப்படி புகார் அளிக்கப்பட உள்ளது.