மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் எதிர்காலத்தில் பயிற்சியாளராக இணைய ஆர்வமாக இருப்பதாக முன்னாள் கேப்டன் சர் அலாஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் தரத்தை மீண்டும் நிலைநிறுத்த, உதவிப் பயிற்சியாளராக குக் உதவலாம் என மைக்கேல் அதர்டன் பரிந்துரைத்துள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கேல் அதர்டன், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும், இதிலிருந்து மீண்டு வர ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். குக் போன்ற ஒருவர் பயிற்சியாளர் குழுவில் இணைவது, தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமானது என்றும் அதர்டன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, ஒரு புதிய குரல் தேவை என்று அதர்டன் குறிப்பிட்டார்.வீரர்களை ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்ப்பதில் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் சிறந்தவர் என்று அதர்டன் பாராட்டினார். ஆனாலும், அணியின் செயல்பாடு சற்று குறைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"பிரண்டன் மெக்கல்லமின் பலம் என்னவென்றால், அவர் வீரர்களை மிகவும் உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் உணர வைக்கிறார். ஆனால் செயல்பாட்டுகள் சற்று சரிந்துவிட்டதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்," என்றும் அதர்டன் விளக்கினார்.
அதேபோல, இங்கிலாந்து அணிக்கு ஒழுக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பெருக்குவதற்கு ஒருவர் தேவை என்றும், இந்த குணங்களை அலாஸ்டர் குக் வழங்க முடியும் என்றும் அதர்டன் உறுதியாகத் தெரிவித்தார்.
மைக்கேல் அதர்டனின் பரிந்துரை குறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் பேசிய குக், தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
"என் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் நான் ஈடுபட விரும்புவேனா? நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்." இருப்பினும், "அது அடுத்த படியா அல்லது வேறு ஏதேனுமா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது சிலர் பதவிகளில் இருக்கிறார்கள். இதுவரை எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்," என்றும் குக் தெரிவித்தார்.
ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியை தழுவிய நிலையில், பாக்சிங் டே டெஸ்டில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக ஒயிட்வாஷ் ஆவதிலிருந்து இங்கிலாந்து அணி தப்பித்து கொண்டது. இதே போன்று 5வது டெஸ்டிலும் இங்கிலாந்து வென்றால், பெரிய அவமானத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.