மெல்போர்ன்: ஆசஸ் தொடரில் மிகவும் முக்கிய போட்டி என்றால், அது பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தான். கிறிஸ்ட்மஸ்க்கு அடுத்த நாள் பாக்ஸிங் டே கொண்டாடப்படும். இந்த நாளில் விளையாட்டுப் போட்டிகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் ஆசஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது. இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், ஜேக் வெதரால்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணியின் அனுபவ வீரர்களான மார்னஸ் லாபஸ்சென் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
இதனால் அந்த அணி 51 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுவரிசையில் விளையாடிய உஸ்மான் கவஜா நிதானமாக விளையாடி 52 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த நிலையில் அட்கின்சன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதைப் போன்று அலெக்ஸ் காரி 20 ரன்களில் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாடிய மைக்கேல் நேசர் 7 பவுண்டரிகளை அடித்து 35 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து களமிறங்கிய கீழ் வரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 45.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ஜோ டங் ஐந்து விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த தொடரில் இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவி வந்த நிலையில், அந்த அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவ போகிறது என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இந்தப் போட்டியை 93 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் கண்டு களித்தனர்.