லண்டன்: 2025-26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 1-4 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்துத் துவண்டு போயிருக்கும் இங்கிலாந்து அணிக்கு, மற்றொரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கிரிக்கெட் கேப்டன் ஹாரி ப்ரூக், கடந்த ஆண்டு நியூசிலாந்தில் செய்த தவறுக்காகத் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) சுமார் ரூ. 36 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, வெலிங்டனில் 3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஹாரி ப்ரூக் ஒரு இரவு நேரக் கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் அதிகப்படியான மது போதையில் இருந்ததால், விடுதிப் பாதுகாவலர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தை ஹாரி ப்ரூக்கே தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இது குறித்து ரகசிய விசாரணை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், தற்போது அவருக்கு £30,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 36.29 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.
தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ள ஹாரி ப்ரூக்: "என்னுடைய நடத்தை தவறானது என்பதையும், அது இங்கிலாந்து அணிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது என்பதையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். சக வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதற்காக வருந்துகிறேன். இனி களத்திற்கு வெளியேயும் பொறுப்புடன் நடந்து கொள்வேன். நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இது மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையாக உழைப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தொடரில் நடந்த சம்பவத்துக்கு ஹாரி புரூக் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் தற்போது நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த உள்ளது.
ஆஷஸ் தொடரில் 1 - 4 என இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததோடு, தொடரின் இடையே அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு சாலைகளில் சுற்றித் திரிந்ததாக ஒரு புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க வரும் ஜனவரி 19-ம் தேதி இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்த ஹாரி ப்ரூக் தயாராகி வருகிறார்.