பெர்த்: 2025 ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா துவக்க வீரராகக் களமிறங்கவில்லை. அதன் பின்னணியில் அவர் இந்தப் போட்டிக்கு முன்பு கோல்ஃப் விளையாடியதும், அதனால் ஏற்பட்ட முதுகு வலியும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் ஊடகங்களும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
2025 ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் சொதப்பியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சமாளித்து 172 ரன்கள் எடுத்தது. அது மிகவும் குறைவான ஸ்கோர் என நினைத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா அதைவிட மோசமாக ஆடியது.

குறிப்பாக, துவக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் அறிமுக வீரர் ஜேக் வெதரால்டு களமிறங்கும்படி திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக மார்னஸ் லாபுஷேன் மற்றும் ஜேக் வெதரால்டு ஆகியோர் பேட்டிங் செய்ய வந்தனர். இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகம் பின்னர் விளக்கம் அளித்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது உஸ்மான் கவாஜா மைதானத்தை விட்டு வெளியேறி சிறிது நேரம் ஓய்வறையில் இருந்தார். ஒரு வீரர் எத்தனை நேரத்தை மைதானத்தை விட்டு வெளியே செலவிடுகிறாரோ, அதற்கு ஏற்ப குறிப்பிட்ட நேரம் வரை அவர் மீண்டும் ஆடுகளத்திற்குள் பந்து வீசவோ அல்லது பேட்டிங் செய்யவோ முடியாது என்ற விதி உள்ளது.
உஸ்மான் கவாஜா எட்டு நிமிடங்களை ஆடுகளத்திற்கு வெளியே செலவிட்டு இருந்தார். எதற்காக அவர் ஓய்வறைக்குள் சென்றார் என்பதில்தான் சர்ச்சை அடங்கியுள்ளது. அவருக்கு முதுகில் வலி இருந்ததால் பிசியோதெரபிஸ்ட் உதவியை நாடி அவர் உள்ளே சென்று இருந்தார். அவருக்குச் சில பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் நாளில் சில ஓவர்கள் வீசப்பட்ட உடனேயே உஸ்மான் கவாஜாவுக்கு எப்படி முதுகு வலி ஏற்பட்டது என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. இதன் பின்னணியைத்தான் ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஆய்வு செய்து விமர்சித்து வருகின்றன.
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன் உஸ்மான் கவாஜா கோல்ஃப் தொடர் ஒன்றில் பங்கேற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவரது துவக்க வீரர் என்ற இடத்தில் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதை சுட்டிக் காட்டி அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர் முன்னாள் வீரர்கள்.
இதில் மேலும் மோசமாக, துவக்க வீரர் ஜேக் வெதரால்டு முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மொத்தம் இரண்டு பந்தைச் சந்தித்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது மூன்றாம் வரிசையிலும் உஸ்மான் கவாஜா பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், அப்போதும் அவர் பேட்டிங் செய்ய காத்திருக்க வேண்டிய கால அவகாசம் முடியவில்லை. எனவே, மூன்றாம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய வந்தார்.
உஸ்மான் கவாஜா செய்த சொதப்பலால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் வரிசையே மாறியது. பின்னர் மார்னஸ் லாபுஷேன் ஆட்டமிழந்த பிறகு நான்காம் வரிசையில்தான் உஸ்மான் கவாஜா பேட்டிங் செய்யக் களமிறங்கினார். அதிலும் 6 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். ஒரு மூத்த வீரராக உஸ்மான் கவாஜா ஆட்டத்தின் முதல் ஓவரை சந்தித்து விக்கெட் இழப்பின்றி ஆடி இருந்தால் இந்த இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக சென்று இருக்கக் கூடும் என முன்னாள் வீரர்கள் பலரும் சுட்டிக் காட்டினர்.
ஆஸ்திரேலிய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 45.2 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலிய அணியின் இந்த மோசமான ஆட்டத்தை ஆஸ்திரேலிய ஊடகங்கள் சரமாரியாக விமர்சித்தன. அதில் உஸ்மான் கவாஜா கோல்ஃப் ஆடியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்பாரா அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.