லண்டன் : இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் பிடித்த கேட்ச் ஒன்றுக்கு நடுவர் அளித்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆஷஸ் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 416 ரன்களும் இங்கிலாந்தின் 325 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரகளை குவித்தது. இதனை அடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 114 ரன்கள் விக்கெட் என்ற நிலையுடன் நான்காவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி முடித்துள்ளது.

கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 257 ரன்களும், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆறு விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து வீரர் பெண் டக்கட் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேமரான் கிரீன் வீசிய பந்தை தூக்கி அடித்தார். அது தேர்ட்மென்ட் திசை நோக்கி சென்றது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மிட்செல் ஸ்டார்க் ஓடி வந்து கேட்சை பிடித்தார். எனினும் அவர் கேட்ச் பிடித்து விட்டு பந்தை கீழே வைத்தார்.
ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேமரான் கிரீன் கேட்சை பிடித்து பந்தை கீழே வைத்தார். ஆனால் அதற்கு மூன்றாம் நடுவர் அவுட் வழங்கினார். அப்போதே இந்திய தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுப்மன் கில்லுக்கு அவுட் வழங்கியதால் இதுவும் அவுட்டுதான் என ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
ஆனால் இந்தப் போட்டியில் இருந்த மூன்றாம் நடுவர் மறைஸ் ஏராஸ்மாசிஸ் இதனை நாட் அவுட் என்று அறிவித்தார். காரணம் பந்தை மிட்செல் ஸ்டார்க் கீழே வைத்து விட்டார் என்று அவர் கூறினார். இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் அதிர்ச்சியில் நின்றனர். இந்த சம்பவத்தை வைத்து இந்திய ரசிகர்களும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். சுப்மன் கில் பேட்டிங் செய்த போது கேமரான் கிரீன் கேச் பிடித்து விட்டு கீழே வைத்தார். அப்போது அவருக்கு அவுட் வழங்கிவிட்டு அதே போன்ற கேட்சை தற்போது ஸ்டார்க் செய்த பிறகு அதற்கு மூன்றாம் நடுவர் நாட் அவுட் வழங்கியது மட்டும் ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கில்லுக்கு ஒரு நியாயம் பென் டக்கட்டுக்கு ஒரு நியாயமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கேமரான் கிரீன் கேட்ச் பிடித்து விட்டு நான் பிடித்தது நியாயமான கேட்ச் தான் என்று கூறிய நிலையில் தற்போது அவருடைய பந்து வீச்சிலேயே இதுபோன்று அவருக்கு நாட் அவுட் வழங்கப்பட்டிருப்பது கர்மாவின் செயல் என்று இந்திய ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.