சிட்னி: ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டில், இங்கிலாந்தின் 22 வயது இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். 162 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக தனி நபராக போராடி வருகிறார்.
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் புமுதல் ஓவரிலேயே சாக் கிராலி அவுட்டான பிறகு, களம் இறங்கிய பெத்தேல் ஒரு முனையில் நிலைத்து நின்றார். 50வது ஓவரில் பியூ வெப்ஸ்டர் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி அடித்து அவர் நூறு ரன்களை எட்டினார், இதில் மொத்தம் 13 பவுண்டரிகள் அடங்கும்.

பென் டக்கெட்டுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 110 பந்துகளில் 81 ரன்களையும், ஹாரி புரூக்குடன் நான்காவது விக்கெட்டுக்கு 115 பந்துகளில் 102 ரன்களையும் குவித்து பெத்தேல் முக்கிய பார்ட்னர்ஷிப்களை அமைத்தார். இவரது சதத்திற்குப் பிறகு, அவருடைய தந்தை உணர்ச்சிவசப்பட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.
இதே ஆஷஸ் டெஸ்டில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் வரலாற்றில் இடம்பிடிக்கும் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் குவித்த ஸ்மித், பிராட்மேனின் 5028 ரன்களை முறியடித்து, இங்கிலாந்துக்கு எதிராக மொத்தமாக 5094 ரன்களை எட்டினார்.
பிராட்மேன் 37 டெஸ்ட் போட்டிகளின் 63 இன்னிங்ஸ்களில் இதைச் செய்திருக்க, ஸ்மித் 90 சர்வதேச போட்டிகளின் 122 இன்னிங்ஸ்களில் (அனைத்து வடிவங்களிலும்) இச்சாதனையை நிகழ்த்தினார். தற்போது 4வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவை விட 119 ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணி பெற்றுள்ளது. கடைசி 1 நாள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் வெற்றியே பிரகாசமாக உள்ள நிலையில், இங்கிலாந்து அணி கடைசி 2 விக்கெட்டுகள் வைத்து, பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.