தோனி அறிமுகம்
தோனி விக்கெட் கீப்பராக 2004இல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதன் பின் 2005இல் பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் விசாகப்பட்டினம் போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் தான் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக மாறினார்.
நெஹ்ரா திட்டிய சம்பவம்
அதே பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் தான் ஆஷிஷ் நெஹ்ரா, தோனியை திட்டிய சம்பவமும் நடந்தது. இது பற்றி பலரும், நெஹ்ரா, தோனியை திட்டிய அதே போட்டியில் தான், தோனி சதம் அடித்து தன்னை நிரூபித்தார் என கூறுவதுண்டு.
வேறு போட்டி
ஆனால், அதே தொடரில் தோனி சதம் அடித்த பின் நடந்த வேறு ஒரு போட்டியில் தான் ஆஷிஷ் நெஹ்ரா தோனியை திட்டி இருந்தார். ஷாஹித் அப்ரிடி கொடுத்த கடினமான கேட்ச்சை விக்கெட் கீப்பர் தோனி தவறவிட்டார். அதைக் கண்டு கோபமடைந்த நெஹ்ரா ஹிந்தியில் கடுமையான சொற்களை பயன்படுத்தி திட்டி இருந்தார்.
விளக்கம் அளித்த நெஹ்ரா
15 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த சம்பவம் பற்றி இப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார் நெஹ்ரா. பலரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் அந்த சம்பவம் நடந்தது என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்தார்.
அன்று என்ன நடந்தது?
"எனக்கு விசாகப்பட்டினம் ஒருநாள் போட்டி பற்றி நன்றாக நினைவிருக்கிறது. அது அந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி. அந்த வைரலான வீடியோவில், ஷாஹித் அப்ரிடி பேட்டில் பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பில் டிராவிட், தோனி இடையே சென்றது" என்றார் நெஹ்ரா.
அஹ்மதாபாத் போட்டி
"மக்கள் அது விசாகப்பட்டினம் போட்டியில் நடந்தது என நினைத்து விட்டார்கள். ஆனால், அந்த சம்பவம் அஹ்மதாபாத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் நடந்தது. எப்படி இருந்தாலும், நான் என் நடத்தையை எண்ணி பெருமைப்படவில்லை" என்றார் நெஹ்ரா.
ஏன் அப்படி செய்தேன்?
தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் எனவும் அவர் விளக்கினார். "அதற்கு முந்தைய பந்தில் அப்ரிடியால் சிக்ஸ் அடித்து இருந்தார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பதால் வழக்கமான அழுத்தமும் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து அது நழுவியது"
டிராவிட், தோனி என்ன செய்தார்கள்?
"எனவே, நான் என் அமைதியை இழந்து விட்டேன். இது போன்ற சூழ்நிலையில், ஒரு வீரர் தன் அமைதியை இழப்பது முதன்முறையல்ல. டிராவிட், தோனி இருவருமே போட்டிக்கு பின் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அது என் நடத்தையை சரியானதாக மாற்றி விடாது" என தன் தவறை ஒப்புக் கொண்டார் நெஹ்ரா.
நான் காரணம் அல்ல
"அந்த வீடியோ இன்னமும் பிரபலமாக இருக்கிறது. அதற்கு காரணம், அதில் தோனி இருக்கிறார். இது விராட் கோலிக்கு நான் பரிசு அளிக்கும் பழைய புகைப்படம் போன்றது தான். அந்த புகைப்படம் பிரபலமாக இருக்க காரணம் கோலி தான், நான் இல்லை" என தோனி, கோலி ஆகியோர் இருக்கும் உயரத்தை குறிப்பிட்டு கூறினார் நெஹ்ரா.
குழந்தைகள் பார்த்தால்..
தான் தோனியை திட்டியது தவறு தான் என ஒப்புக் கொண்ட நெஹ்ரா, ஒருநாள் தன் குழந்தைகள் அந்த வீடியோவை காண நேரிட்டால் தான் ஏன் அன்று அப்படி நடந்து கொண்டேன் என விளக்க வேண்டிய நிலை வரும் எனவும் கூறினார்.