சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருப்பது மாபெரும் சாதனை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தமிழக வீரருமான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
37 வயதான அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒருநாள் டி 20 கிரிக்கெட்டிலும் 2011 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை அஸ்வின் தவிர்க்க முடியாத ஒரு வீரராக இருந்தாலும் வெளிநாட்டு மண்ணுகளின் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் நீக்கப்படுவார்.

உலகின் தலைசிறந்த வீரர் என்ற பெயர் பெற்ற அஸ்வினுக்கே இந்த நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை கும்ப்ளே பெற்றிருக்கிறார். கும்ப்ளே 132 டெஸ்ட்களில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
கும்ப்ளேவை விட அஸ்வின் 103 விக்கெட்டுகள் பின்தங்கி இருந்தாலும், குறைந்தபட்சம் அஸ்வின் இன்னும் 25 டெஸ்ட் போட்டிகளின் விளையாடினால் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வினை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், சென்னையிலிருந்து ஒரு பையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அஸ்வின் செய்திருப்பது மாபெரும் சாதனை. தமிழக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது மற்றவர்கள் அவரை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சொதப்பினால் எப்போது அவனை அணியை விட்டு தூக்கலாம் என்று அனைவரும் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அஸ்வின் அனைத்தையும் மீறி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் இந்த சாதனைக்கு அவருடைய தந்தையும் தாயும்தான் காரணம். அஸ்வினுக்கு 12 வயது இருக்கும் போதெல்லாம் அவளுடைய தாய் மைதானத்திற்கு தினமும் அழைத்துச் செல்வார்.
அஸ்வினுக்காக அவருடைய தந்தை ஏறாத கோவில் கிடையாது. அஸ்வின் தந்தை செய்த நல்ல விஷயங்களுக்கு தான் தற்போது இவர் சாதித்து இருக்கிறார் என்று நான் நினைக்கின்றேன். பொதுவாக தமக்கு ஏதேனும் அழைப்பிதழ் வந்தால் அதை கிழித்து தூக்கி போட்டு விடுவேன். ஆனால் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு தமிழக கிரிக்கெட் வாரியம் நடத்திய பாராட்டு விழாவிற்கான அழைப்பிதழை நான் நிகழ்ச்சி முடிந்தும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
அஸ்வின் உடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு சிறு தொடக்கப் புள்ளியாக நான் இருந்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். அதே சமயம் அஸ்வின் தற்போது வேண்டுமென்றே பந்துவீச்சில் அதிக வேரியேஷன் காட்டுகிறார். அது வேண்டாம் அஸ்வின்! நீங்கள் எப்போதும் போல் ஒரே மாதிரி பந்து வீசுங்கள்.
நீங்கள் எப்போதும் போல் பந்து வீசினாலே, உங்களுக்கு நிச்சயம் விக்கெட் கிடைக்கும். நீங்கள் விக்கெட் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று ஸ்ரீகாந்த் அறிவுரை கூறினார். இந்த பேச்சைக் கேட்ட அஸ்வின் கண்டிப்பாக நீங்கள் சொல்வதை நான் களத்தில் செய்கிறேன் சார் என்று தெரிவித்துள்ளார்.