சென்னை: இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியை தான் குறைத்து மதிப்பிட்டதாக சமூக வலைத்தளத்தில் வந்த குற்றச்சாட்டுக்கு, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் டி20 உத்தி குறித்த தனது பாராட்டை அவர் தெளிவுபடுத்தினார்.
'எக்ஸ்’ (X) தளத்தில் ப்ளூ டிக் கட்டண சேவை தொடங்கியதிலிருந்து, முக்கியப் பிரமுகர்கள் குறித்து தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புத் தூண்டும் பதிவுகள் அதிகரித்துள்ளன. அப்படியான ஒரு ட்ரோல் பேர்வழியை, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் எதிர்கொண்டார்.

அஷ்வின் தனது 'அஷ் கி பாத்’ யூடியூப் நிகழ்ச்சியில் இந்தியாவின் டி20 உத்தி குறித்துப் பேசினார். கவுகாத்தியில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 154 ரன் இலக்கை இந்தியா 10 ஓவரில் துரத்தி அடித்ததைப் புகழ்ந்தார். இதை நெட்டிசன்கள் தவறாகப் புரிந்துகொண்டு, கோலியை மறைமுகமாக அஸ்வின் விமர்சிப்பதாகக் கூறினர்.
தனது யூடியூப் வீடியோவில், இக்கால டி20 கிரிக்கெட்டில் 160-170 ரன்கள் போன்ற நடுத்தர ஸ்கோர்கள் பயனற்றவை என்று அஷ்வின் குறிப்பிட்டிருந்தார். வெற்றிக்கு உகந்த ஸ்கோர்கள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து 176/7 ரன்கள் எடுத்தும், இந்தியா அதிர்ஷ்டவசமாக வென்றது எப்படி என்பதையும் அஷ்வின் சுட்டிக்காட்டினார். ஜஸ்பிரித் பும்ராவின் அபார பந்துவீச்சு மற்றும் சூர்யகுமாரின் கேட்ச் மூலம் அந்த வெற்றி சாத்தியமானது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது.
இருந்தபோதிலும், அஷ்வின் கோலியின் முக்கிய பங்களிப்பை புறக்கணிப்பதாக நெட்டிசன்கள் சித்தரித்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து, இந்தியாவின் சரிவிலிருந்து மீண்டு 170 ரன்களைக் கடக்க உதவினார். தனது கடைசி டி20 சர்வதேசப் போட்டியில் 'ஆட்ட நாயகன்' விருதையும் பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் பல ஆண்டுகளாகச் சுறுசுறுப்பாக இருக்கும் அஷ்வின், இதுபோன்ற சர்ச்சைகளுக்கும், வெறுப்புத் தூண்டும் பதிவுகளுக்கும் பதிலளிக்கும் அனுபவம் கொண்டவர். கோலியை குறிவைத்ததாகக் குற்றம் சாட்டிய அந்த நபரை, அவர் சாதுரியமாகவே கிண்டல் செய்தார்.
இது குறித்து அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் "மறைமுக தாக்குதல் குறித்து 'Rajiv1841'யின் கவலை பற்றி விராட்டுடன் பேசினேன். கிளிக்பைட் ரசிகர் சண்டைகளுக்கு சமூக ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து நாங்கள் இருவரும் நன்றாக சிரித்தோம். பழகவும், பேசவும் ஒரு காரணத்தை அளித்ததற்கு நன்றி. ☺️☺️" (https://t.co/0tXfxoNM6y).
அந்த ட்ரோல் அத்துடன் நிற்கவில்லை. அப்போதைய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பெயரையும் இழுத்து, ரசிகர்களிடையே சண்டையைத் தூண்ட முயன்றது. கோலிக்கு எதிராக அஷ்வின் ரோஹித்தை உயர்த்திப் பேசுவதாகவும் தவறாகக் குற்றஞ்சாட்டியது.
ஆனால், அஷ்வின் தனது வீடியோவில், 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அடிலெய்டில் இங்கிலாந்திடம் ஏற்பட்ட தோல்விக்குப் பிந்தைய இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறையை ரோஹித் ஷர்மா எப்படி மாற்றியமைத்தார் என்பது குறித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.