இந்தூர் : இந்திய அணியில் நீண்ட நாட்கள் ஒருநாள் போட்டியில் ஆடி இருக்காத அஸ்வினை தேர்வு செய்ய என்ன காரணம் என்ற கேள்வி இருந்தது.
அதற்கான பதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடந்த அந்த சம்பவம் மூலம் கிடைத்துள்ளது. என்ன நடந்தது?

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் இரண்டாவது போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ருதுராஜ் கெயிக்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன் குவித்து வந்தனர். அப்போது மழை பெய்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. அப்போது இந்திய அணி 9.5 ஓவர்களில் 79 ரன்கள் குவித்து இருந்தது.
இந்தூர் ஆடுகளம் பொதுவாகவே அதிக ரன்கள் குவிக்கும் இடமாக கருதப்படுகிறது. அதற்கேற்ப இந்திய அணியும் அதிரடியாக ரன் குவித்தது. ஆஸ்திரேலியா அணி அடுத்து சேஸிங் செய்யும் போது பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்துவீச கடினமாக இருக்கும்.
மழையால் போட்டி தடைபட்ட அந்த சமயத்தில் அஸ்வின், அது குறித்து கேப்டன் கே எல் ராகுலிடம் நீண்ட நேரம் பேசினார். அவர் தனது ஆலோசனைகளை கேப்டனுக்கு கூறினார் அடுத்து பயிற்சியாளர் டிராவிட் உடன் தீவிரமாக இது குறித்து பேசினார்.
வேறு எந்த வீரரும் இது குறித்து கவலைப்படாத நிலையில், அஸ்வின் முன் கூட்டியே தனது திட்டங்கள் குறித்து ஆலோசித்தார். டிராவிட் முன்பு அஸ்வினை இந்திய அணிக்கு தேர்வு செய்ய காரணம் அவரது அனுபவம் தான் எனக் கூறி இருந்தார். அதை நிரூபிக்கும் வகையில் கண் முன்னே அது நடந்தது. உலகக்கோப்பை தொடரிலும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் அஸ்வின் இருக்கக்கூடும்.