பார்படாஸ்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இது தொடர்பாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் வெற்றி குறித்துப் பேசிய ராபின் உத்தப்பா, எமோஷ்னல் ஆகி இருப்பார். எப்போதும் எமோஷனை தள்ளியே வைக்கும் அஸ்வின் கூட இதில் கண்ணீர்விட்டார். இது பார்க்கும் அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்தது.
டி20 உலகக் கோப்பை இறுதி போட்டி நேற்றைய தினம் பார்படாஸில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 176 ரன்களை எடுத்தது.

அடுத்துப் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அஸ்வின்: இதற்கிடையே இந்த போட்டி முடிந்த பிறகு அஸ்வின் தனது யூடியூப் சேனலில் லைவில் வீடியோ வெளியிட்டார். அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் கிரிக்கெட் அனாலிசிஸ்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முதலில் பேசிய ராபின் உத்தப்பா, அனைத்து வீரர்களுக்கும் ஏன் இந்த வெற்றி முக்கியமானது என்பது குறித்துப் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் பேசும் போது அவரால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
ராபின் உத்தப்பா பேசுகையில், "போட்டி முடிந்த போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. டீமில் இருந்த ஒவ்வொரு வீரரும் கடந்த 4, 5 ஆண்டுகளாக பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டுள்ளனர். எத்தனை கிண்டல்கள், எத்தனை விமர்சனங்கள், எத்தனை வெறுப்பு.. இதை எல்லாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்வது அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை.
20 நிமிடம் அழுதேன்: நமக்கே நம் மீது சந்தேகம் வருவது போன்ற விமர்சனங்கள், வெறுப்புகள் வரும். அதை எல்லாம் என்னால் உணர முடிகிறது. அதையும் தாண்டி நாம் இந்த டி20 வென்றுள்ளோம். 20 நிமிடங்களுக்கு என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடவுளுக்கு நன்றி சொல்லப் பிரார்த்தனையும் செய்தேன். பல கால காத்திருப்புக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
டிராவிட்டை பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் இந்தியாவுக்காக எத்தனை காலம் ஆடி இருக்கிறார். அவர் இப்போது பயிற்சியாளராக இருக்கிறார். இது பயிற்சியாளராக அவருக்குக் கடைசி போட்டியாகக் கூட இருக்கலாம். பயிற்சியாளராகக் கடைசி நாளில் இந்த ஐசிசி டிராபி கிடைத்துள்ளது. 50 வயதான டிராவிட் 5 வயது குழந்தையைப் போல உலகக் கோப்பையைத் தூக்கிக் கொண்டாடினார். இதுதான் ஒரு விளையாட்டின் அழகு.. இப்படி ஒவ்வொரு வீரருக்குப் பின்னாலும் அவ்வளவு வலி இருக்கிறது. கோலி, ரோஹித் என ஒவ்வொரு வீரருக்குப் பின்னாலும் வலி இருக்கிறது" என்றார்.
அஸ்வின்: ராபின் பேசத் தொடங்கியதுமே அஸ்வினும் கண் கலங்கி எமோஷனல் ஆனார். இது அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. அஸ்வின் பொதுவாகவே பெரும்பாலும் எமோஷனல் ஆக மாட்டார். அனைத்தையும் கூலாகவே ஹேண்டில் செய்வார். ஆனால், இந்த முறை அஸ்வினும் எமோஷனல் ஆகி, அவரும் கண்ணீர் விட்டது இந்த உலகக் கோப்பை எந்தளவுக்கு முக்கியமானது என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.