
ஆசிய கோப்பை தொடர்
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்காததால், இந்திய அணி அங்கு செல்லாது எனக்கூறினார். மேலும் அனைத்து அணிகளும் பங்கேற்கும் வகையில் வேறு நாட்டிற்கு தொடர் மாற்றப்படும் எனவும் கூறினார். இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் வாரியம், எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கடும் வாக்குவாதம்
இதுகுறித்து முடிவெடுக்க சமீபத்தில் ஆசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் என்ன நடந்தாலும், பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என ஜெய் ஷா கூறினார். மறுபுறம் இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் மீண்டும் மார்ச் மாதம் புதிய கூட்டம் நடைபெறும்.

அஸ்வின் கருத்து
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அஸ்வின் பேசியுள்ளார். அதில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்க வேண்டியது தான். ஆனால் அங்கு நடந்தால் இந்தியா வரவில்லை எனக்கூறிவிட்டோம். நாங்கள் கலந்துக்கொள்ள விரும்பினால் வேறு இடத்திற்கு மாற்றுங்கள். பாகிஸ்தான் இந்தியாவுக்கு வராது என்ற மிரட்டல்களை பலமுறை பார்த்துவிட்டோம்.

இலங்கைக்கு செல்லுங்கள்
உலகக்கோப்பைக்காக இந்தியாவுக்கு வரமாட்டோம் என அவர்கள் கூறுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு கொஞ்சம் கூட கிடையாது. இறுதி முடிவு ஒன்று எடுத்தால் ஆசிய கோப்பையை இலங்கையில் நடத்த வேண்டும். 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கையில் நடத்தலாம். துபாயில் பல்வேறு தொடர்கள் நடந்துள்ளன. எனவே இந்தமுறை சற்று வித்தியாசமாக இலங்கைக்கு செல்ல ஆசைப்படுகிறேன் என அஸ்வின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications