மும்பை: விராட் கோலி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை கடைபிடிக்கும் நேரம் வந்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அண்மைக்காலமாக மைதானங்களில் கூட்டம் சேருவதில்லை என்ற ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது.
குறிப்பாக இந்திய மைதானங்களில் டி20 ஒருநாள் போட்டிகளை பார்க்கவே ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வருவதாகவும், ஆனால் டெஸ்ட் போட்டிகளை பார்க்க யாரும் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 2000 பேர் கூட போட்டியை வந்து பார்க்கவில்லை. இதைப் போன்று டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. வார இறுதி நாட்களில் மட்டும் ஓரளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் விராட் கோலி சொன்னது போல் இந்தியாவில் ஒரு சில மைதானங்களில் மட்டும் தான் டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், டெஸ்ட் போட்டிக்கு போதுமான கூட்டம் வருவதில்லை என்பது மட்டும் பிரச்சினை கிடையாது.
காலத்தின் சூழலும் டெஸ்ட் போட்டிக்கு மிகவும் முக்கியம் கௌஹாத்தி, ராஞ்சி என பல்வேறு இடங்களில் நாம் டெஸ்ட் போட்டி விளையாடுகிறோம். ஆனால் இப்படி ஒவ்வொரு இடத்தில் விளையாடும் போது ஒவ்வொரு மைதானமும் ஒவ்வொரு மாதிரியாக செயல்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் ஆடுகளத்தில் பவுன்சே இல்லை.
அது வெறும் சாதாரண டெஸ்ட் போட்டியாக அமைந்து விடுகிறது. எங்கு ஆடுகளம் சிறப்பாக இருக்கிறது என நினைக்கிறீர்களோ அதை நீங்கள் டெஸ்ட் போட்டி நடத்தும் மைதானமாக மாற்றி விடுங்கள். சில மைதானங்களில் டெஸ்ட் போட்டி நல்ல வரவேற்பை பெறுகிறது என்றால் அதற்கு ஆடுகளமும் ஒரு காரணமாக இருக்கும். விளையாடும் அணியும் அங்கு நல்ல அனுபவத்தைப் பெற்று இருப்பார்கள்.
இந்திய வரைபடத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நாம் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம் கேட்டால் நமக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகம் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. ஏனென்றால் சில மைதானங்களில் எல்லாம் சில வீரர்கள் விளையாடியிருந்திருக்க மாட்டார்கள். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா மற்றும் கவுகாத்தியில் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகிறது.
அது இந்தியாவின் நிலையான டெஸ்ட் மைதானங்களா என்று கேள்வி எழுகிறது. கௌகாத்தியின் தற்போது இருக்கும் எந்த ஒரு இந்திய அணி வீரரும் அங்கு முதல் தரப் போட்டிகளில் கூட விளையாடியது கிடையாது. விராட் கோலி பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போல் இனி ஒரு சில மைதானங்களில் மட்டும் தான் டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும். இதன் மூலம் அந்த அந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இன்னும் பல நிதி கிடைக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.