லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி என்பது, கோஹ்லி கேப்டனாகப் பொறுப்பேற்றப் பிறகு இந்தியா பெறும் மோசமான தோல்வியாகும்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் வென்றது.
2014ல் ஓவலில் நடந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்களில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பிறகு பெறும் இன்னிங்ஸ் தோல்வி இதுவாகும். அதேபோல் விராட் கோஹ்லி கேப்டனாகப் பொறுப்பேற்றப் பிறகு இந்தியா பெறும் முதல் இன்னிங்ஸ் தோல்வியும் இதுவே.
இந்தப் போட்டியின்போது, மிகவும் குறைந்த அதிகபட்ச ரன்கள் பெற்ற வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.
அதேபோல் பேட்டிங் வரிசையில் 8 அல்லது அதற்கு கீழ் நிலையில் களமிறங்கி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் அணியில் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் 28 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள் எடுத்தார்.
இந்த சாதனையைப் புரியும் முதல் இநதிய வீரர் அஸ்வின். சர்வதேச அளவில் ஆறாவது வீரர் அஸ்வின்.