சென்னை: ரவிச்சந்திரன் அஸ்வின்.. கலர் மாறி விட்டார்.. அதாவது ஐபிஎல்லில் புதிய அணையில் இணைந்துள்ள அவர் தனது புதிய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் சீருடை அணிந்த படத்தை தனது பேஸ்புக்கில் புரபைல் படமாக போட்டுள்ளார்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர்தான் என்ற பழைய விளம்பரம் எப்படி நமது மனதை விட்டு அகலவே அகலாதோ அதேபோலத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் நினைவுகளும்.

அந்த மஞ்சள் நிற சீருடையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. டோணியும், அஸ்வினும், சுரேஷ் ரெய்னாவும், ரவீந்திர ஜடேஜாவும் அந்த உடையில்தான் நமது ரசிகர்கள் மனதில் இன்னும் கொலு வீற்றுள்ளனர்.
ஆனால் சட்டம் அந்த சட்டையை தூக்கி கடாசி வீசச் சொல்லி விட்டது.. ஸோ.. டோணி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இப்போது இரு பிரிவாக பிரிந்து போய் விட்டனர்.
டோணி, அஸ்வின் போன்றோர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் அங்கங்களாகி விட்டனர். புது சீருடையில் வருகிற ஐபிஎல் தொடரில் அவர்கள் புனே புயல்களாக மாறி ஆடப் போகின்றனர்.
இந்த நிலையில் அஸ்வின் தனது புதிய சீருடையுடன் எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் புரபைல் படமாக மாற்றியுள்ளார்.
என்ன இருந்தாலும் அந்த மஞ்சள் அழகு இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்தான்..!