
முதல் முறையாக
அஸ்வின் டெஸ்ட் பவுலர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை முதலிடத்தில் இருந்தவர் தென் ஆப்பிரிக்காவின் டேஸ் ஸ்டெயின் ஆவார்.

ஸ்டெயின் சாதனை
2009ம் ஆண்டு முதல் 5 வருடம் அவர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இ்ந்த முறையும் அவரே முதலிடத்தில் வந்திருக்க வேண்டும். ஆனால் காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சரியாக ஆட முடியாமல் போனதால் அவரது வாய்ப்பு அஸ்வினுக்குப் போய் விட்டது.

பேடிக்குப் பிறகு
இந்தியா கண்ட மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பிஷன் சிங் பேடி கடந்த 1973ம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்திருந்தார். அதன் பிறகு எந்த இந்திய ஸ்பின்னரும் நம்பர் ஒன் ஆனதில்லை. 1973ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அஸ்வின் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.

முதலிடத்தைப் பிடிப்பதில் பேடி- அஸ்வின் சாதனை
அதை விட முக்கியமாக எந்த இந்திய பவுலரும் இதுவரை டெஸ்ட் பவுலர்களுக்கான தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்ததே இல்லை. அதிகபட்சமாக சந்திரசேகர், கபில் தேவ், கும்ப்ளே ஆகியோர் 2வது ரேங்க் வரைதான் வந்துள்ளனர். ஆனால் பேடியும், அஸ்வினும்தான் முதலிடத்தைப் பிடித்து அசத்திய சாதனையாளர்கள்.

அட்டகாசமான 2015
அஸ்விவினுக்கு 2015ம் ஆண்டு அட்டகாசமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்களைக் குவித்து விட்டார்.

15வது இடத்திலிருந்து
2015ம் ஆண்டை அஸ்வின் தொடங்கியபோது அவர் தரவரிசையில் 15வது இடத்தில் இருந்தார். படிப்படியாக முன்னேறி வருடத்தை முடிக்கும்போது முதலிடத்தைப் பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

4வது ஸ்பின்னர்
கடந்த காலங்களில் பேடிக்குப் பிறகு 2005ல் வார்னே முதலிடத்தில் இருந்தார். முத்தையா முரளிதரன் 2006 முதல் 2008 வரை முதலிடத்தில் இருந்தார். அதன் பின்னர் ஸ்டெயின் காலம் தொடங்கியது. இடையில் 2013ம் ஆண்டு வெர்னான் பிலான்டர் முதலிடத்தில் இருந்தார். இப்போது அஸ்வின் வந்துள்ளார்.

பெருமையா இருக்கு பாஸ்
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் என்ன சொல்வது.. பேடியுடன் என்னை நிறுத்திப் பார்ப்பது பெருமையாக மட்டுமல்லாமல் கர்வமாகவும் இருக்கிறது. ஆனால் பேடி பெரிய மேதை. அவருக்குப் பின்னால் நான் இருப்பதே எனக்குப் பெருமையாகும்.

எல்லாத்துக்கும் காரணம் கோஹ்லிதான்
டெஸ்ட் கேப்டன் கோஹ்லியின் தலைமையில் ஆடுவது மிகச் சிறப்பானது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் கோஹ்லி. அணி நிர்வாகம், சக வீரர்கள், பிசிசிஐ ஆகியோரின் ஆதரவையும் மறக்க முடியாது என்றார் அஸ்வின்.
பவுலிங் புயல்களுக்கு மத்தியில் தனித்து உயர்ந்த தமிழ்ச் சூறாவளி.. பெருமைதானே!


Click it and Unblock the Notifications











