இந்தூர் : இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பின் இடம் பெற்று ஒருநாள் போட்டியில் ஆடிய அஸ்வினுக்கு இன்னும் ஒரு பரீட்சை மீதம் உள்ளது.
அதிலும் அஸ்வின் சரியாக தன்னை நிரூபித்து விட்டால் அவர் நிச்சயம் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற்று விடுவார் என்கிறது இந்திய அணி வட்டாரம்.
அஸ்வின் 2013ஆம் ஆண்டிற்கு பின் ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார். கடந்த ஆண்டு திடீரென அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு போட்டிகளில் மட்டும் ஆடினார்.

அதன் பின் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால், இன்னும் சில தினங்களில் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில், திடீரென அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம் பெற்றார்.
முதல் ஒருநாள் போட்டியிலும் ஆடினார். அந்தப் போட்டியில் அவர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். 10 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆனால், அவருக்கு இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், ஒரே போட்டியில் தன் பந்துவீச்சை நிரூபித்து விட்டார். அவரால் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீச முடியும் என காட்டிவிட்டார். ஆனால், இந்திய அணியில் ஆல் - ரவுண்டர் தான் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
எனவே, அஸ்வின் அடுத்த இரண்டு போட்டிகளில் தன் பேட்டிங் திறனையும் நிரூபிக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவிக்கும் ஆற்றல் உள்ளவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து இருக்கிறார்.
அதே போல அடுத்த இரு ஒருநாள் போட்டிகளிலும் பேட்டிங் செய்து ரன் குவிக்க முடியும் என நிரூபித்தால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம் உண்டு.
முதல் ஒருநாள் போட்டி முடிந்த உடன் அஸ்வின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதே இதற்கு சான்று. சீக்கிரம் வாங்க அஸ்வின்.. இந்த தடவை நாம உலகக்கோப்பையை அடிக்கலாம்!