மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அஸ்வினை வாங்க பிக் பாஷ் தொடரில் உள்ள 8 அணிகளும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அல்லது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளில் ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டிசம்பர் மாதம் ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த வாரம் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். அஸ்வினின் ஓய்வுக்கு அறிவிப்புக்கு பின்னணியில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் ஓய்வு அறிவிப்புடன் சேர்த்து, மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

இனி சர்வதேச லீக் போட்டிகளில் விளையாட முடிவு எடுத்துள்ளேன் என்று அஸ்வின் கூறி இருந்தார். அதற்கேற்ப முதற்கட்டமாக செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கவுள்ள ஐஎல்டி20 லீக் தொடரின் ஏலத்தில் தனது பெயரை அஸ்வின் பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே யூசுப் பதான், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் விளையாடி வந்த நிலையில், தற்போது அஸ்வினும் ஐஎல்டி20 லீக்கில் விளையாட இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அஸ்வின் அடுத்தக் கட்டமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட முடிவு எடுத்திருக்கிறார். ஏற்கனவே ஏலம் முடிவடைந்து 8 அணிகளிலும் வீரர்கள் வாங்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் அஸ்வினை பிக் பாஷ் லீக் தொடருக்குள் கொண்டு வர ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருக்கிறது.
டிசம்பர் 15ஆம் தேதி பிக் பாஷ் டி20 லீக் தொடங்க உள்ள நிலையில், தற்போது 8 அணிகளும் அஸ்வினை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி அஸ்வின் மெல்போர்னை மையமாக கொண்ட மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் ஆகிய இரு அணிகளில் ஒன்றை அஸ்வின் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்திய வீரர்களை தங்களது லீக் கிரிக்கெட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. தற்போது அஸ்வின் ஆர்வம் காட்டி வரும் சூழலில், அவரை வாங்க ஆஸ்திரேலியா அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய மார்க்கெட்டை குறி வைத்து அஸ்வினை தங்கள் அணிக்குள் கொண்டு வர அனைத்து அணிகளும் ஆர்வமாக உள்ளது. இதனால் அஸ்வினின் முடிவு மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.