மும்பை: சிஎஸ்கே ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐஎல்டி20 மற்றும் பிபிஎல் ஆகிய லீக் தொடர்களில் விளையாட உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக பிபிஎல் தொடருக்குள் அஸ்வினை கொண்டு வர வேண்டும் என்பதில் ரிக்கி பாண்டிங் தீவிரமாக உள்ளதாகவும், அதற்காக பெரும் தொகையை கொடுக்க முன் வந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த மாதம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன்பின் சர்வதேச டி20 லீக் தொடர்களில் விளையாட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் அஸ்வினை ஒப்பந்தம் செய்ய பல்வேறு லீக் நிர்வாகங்களும் ஆர்வம் காட்டின. இதனால் அஸ்வின் எந்த லீக் தொடரில் விளையாடுவார் என்ற கேள்விகள் எழுந்தன.

அதற்கேற்ப ஐஎல்டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரினை பதிவு செய்திருந்தார். ஐஎல்டி20 லீக் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளதால், அஸ்வின் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐஎல்டி20 லீக்கில் ஆடி வரும் 6 அணிகளில் நிச்சயமாக ஒரு அணி அஸ்வினை வாங்க ஆர்வம் காட்டும் என்று பார்க்கப்பட்டது.
ஏனென்றால் ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய மார்க்கெட் மீது சர்வதேச லீக் கிரிக்கெட் நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. ஒரு இந்திய வீரரையாவது தங்களின் லீக் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் அஸ்வின் ஐஎல்டி20 மற்றும் பிபிஎல் ஆகிய 2 லீக் தொடர்களிலும் விளையாட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஐஎல்டி20 லீக் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடக்க உள்ளது. பிபிஎல் தொடர் டிசம்பர் 14 முதல் ஜனவரி 25 வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஎல்டி20 லீக் தொடரில் விளையாடிய பின், உடனடியாக அஸ்வின் ஆஸ்திரேலியா பறக்க உள்ளார். பிபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சிட்னி தண்டர்ஸ் அணி அஸ்வினை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக உள்ளது.
அதேபோல் டேவிட் வார்னர் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி நிர்வாகம், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகளும் அஸ்வினுக்கு மிகப்பெரிய ஒப்பந்தத்தை கொடுக்க தயாராக இருக்கின்றன. இத்தனைக்கும் பிபிஎல் தொடரில் கடைசி 4 முதல் 5 லீக் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டியில் மட்டுமே அஸ்வினால் விளையாட முடியும்.
ஆனாலும் அஸ்வினை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதில் ரிக்கி பாண்டிங் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. பிபிஎல் தொடரில் மட்டும் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டால், பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். அதேபோல் பிபிஎல் கிரிக்கெட் தொடருக்கு இந்தியாவில் புதிய மார்க்கெட் உருவாகும் என்றும் கணிக்கப்படுகிறது.