மும்பை : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த நிலையில் அஸ்வின் உடைய இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமது இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்பதை அஸ்வினே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
எப்படி கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை புடிங்க சிவா என்று கூறி செல்வது போல் அஸ்வினும் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார். அஸ்வின் ஓய்வுக்கு பிறகு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு அணியின் சக வீரராக இருந்ததைவிட எனக்கு நீங்கள் ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும் நபராகவே இருந்திருக்கிறீர்கள். உங்கள் உடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து வந்ததால், நீங்கள் விளையாடிய ஆட்டங்களை சேப்பாக்கத்தில் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
அதை போல் உங்களுடன் இணைந்து நான் விளையாடியும் இருக்கின்றேன். அதை எல்லாம் நான் பெருமைமிக்க தருணமாக நினைக்கின்றேன். உங்களிடம் நான் கற்ற விஷயங்கள் என் வாழ்க்கை முழுவதும் பயன் பெறும். நீங்கள் அடுத்து செய்ய போகும் அனைத்து விஷயங்களும் வெற்றியையும் மகிழ்ச்சியும் கொடுக்க வேண்டும் என நான் வாழ்த்துகிறேன் என வாஷிங்டன் சுந்தர் கூறியிருந்தார்.
இதற்கு பதல் அளித்துள்ள அஸ்வின், துப்பாக்கிய புடிங்க வஷி, நான் கிளம்பும் முன் அனைவருக்கும் இடையே நீங்கள் ஆற்றிய அந்த இரண்டு நிமிட உரை மிகவும் சிறந்ததாக இருந்தது என அஸ்வின் கூறியுள்ளார். தன்னுடைய இடத்தில் வாஷிங்டன் சுந்தர் தான் இடம்பெற வேண்டும் என்பதை அஸ்வின் தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெயரை பிடித்திருக்கிறார். எனினும் அஸ்வின் போன்ற பெயரை பெற அவர் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதே சமயம் அஸ்வின் போல் வாஷிங்டன் சுந்தரும் நல்ல பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.