மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவருடைய நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அபினவ் முகுந்த் பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதில் அஸ்வின் எப்போதுமே கிரிக்கெட்டில் எப்படி விளையாடலாம் என்பது குறித்து யோசித்துக் கொண்டு இருப்பார். பள்ளி தேர்வுக்கு ஒரு மாணவர் எப்படி தயாராகுவாரோ அதேபோல் தான் அஸ்வினும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வார். எந்த வீரருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எல்லாம் முன்கூட்டியே அஸ்வின் யோசித்து வைத்திருப்பார்.
இதற்காக அவர் உழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். எங்களுக்கு 17 வயது இருக்கும் போது நானும் அஸ்வினும் ஒன்றாக இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறோம். ஆனால் தற்போது அஸ்வின் அவருக்கு ஏற்ற இடமான நடுவரிசையில் விளையாடுகிறார். அஸ்வினுடைய பேட்டிங் திறமை தற்போது வெளியே வருவது பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.
அஸ்வினை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் இதை நான் சொல்லி ஆக வேண்டும். அஸ்வினுக்கு உடலளவில் குறை இருக்கிறது. மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல் அவரால் உடலை வளைத்து சிறப்பாகலாம் செயல்பட முடியாது. உடல் தகுதியில் அவருக்கு சில தடைகள் இருக்கிறது. ஆனால் இந்த தடைகளை எல்லாம் அவர் தன்னுடைய மூளையால்தான் சரி செய்து வருகிறார்.
அவருக்கு உடலால் என்ன செய்ய முடியவில்லையோ, அதனை மூளையால் யோசித்து தன்னுடைய குறையை சரி கட்டி விடுகிறார்.எப்படி ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தன்னுடைய திரைப்படங்களை வித்தியாசமான முறையில் இயக்குகிறாரோ அதேபோல் அஸ்வினும் தன்னுடைய கிரிக்கெட்டை எப்போதும் வித்தியாசமான முறையில் யோசித்து விளையாடுவார் என்று அபினவ் முகுந்த் கூறியுள்ளார்.