புறக்கணிப்பு காயத்தை மறந்து புயலாக மாறுவாரா அஸ்வின்!
டெல்லி: இந்தியா வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டித் தொடர்களில் சமீபத்தில் பங்கேற்றது. ஒன்பது போட்டிகளிலும் இந்திய அணி வென்றது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறது. தலா மூன்று டெஸ்ட் போட்டிகள், ஒருதினப் போட்டிகள், டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டி தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் மீண்டும் முரளி விஜய்
இலங்கை தொடருக்கு முந்தைய இந்திய டெஸ்ட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த அபினவ் முகுந்துக்கு பதிலாக, காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின்
அஜிங்யா ரஹானே துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படாமல் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, சதேஸ்வர் புஜாரா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட் போட்டி, கோல்கத்தாவின் ஈடன் கார்டனில், நவம்பர் 16ல் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நாக்பூரில் நவம்பர் 24ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், டில்லியில் டிசம்பர் 2ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது.

இந்திய அணி விவரம்
இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), குல்தீப் யாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, சதேஸ்வர் புஜார், அஜங்யா ரஹானே, கே.எல். ராகுல், விருத்தமான் சாகா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, ஷிகார் தவான், உமேஷ் யாதவ், முரளி விஜய், ஹார்திக் பாண்டியா.


Click it and Unblock the Notifications