திண்டுக்கல் : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் சிறந்த போட்டி ஒன்று தற்போது நடந்து முடிந்துள்ளது. திண்டுக்கல் அணிக்கு எதிரான லீக் அட்டத்தில் கடைசி 6 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 2 பவுண்டரிகள், 3 விக்கெட்டுகள் விழ, சேப்பாக் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றையப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற திண்டுக்கல் அணியின் சுபோத் குமார் பாட்டீ பேசுகையில், "எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன். பேட்டிங் அல்லது பெளலிங் எதுவாக இருந்தாலும் அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை அளிக்க முடிந்தவரை முயற்சிப்பேன். இன்று அது நிறைவேறியதில் மகிழ்ச்சி" என்று கூறினார்.

தோல்விக்குப்பின் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் பேசுகையில், "வெற்றி தோல்வி ஆட்டத்தில் சகஜம் ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் அதிலிருந்து மீண்டு அடுத்தப்போட்டியில் எப்படி நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். பாபா அபரஜித் டி.என்.பி.எல்லில் பல முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். இன்றும் கிட்டத்தட்ட அவரின் முயற்சியால் மட்டுமே ஆட்டம் இந்தளவிற்கு நெருக்கத்தில் முடிந்தது" என்று தெரிவித்தார்.
வெற்றிக்குப்பின் திண்டுக்கல் டிராகன்ஸின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் பேசுகையில், "இந்த விக்கெட்டில் இந்தளவிற்கு செயல்பட்டதற்காகவே எனது அணியினருக்கு தனி விருதே கொடுக்கலாம். ஏனென்றால் இதில் முதலில் பேட்டிங் செய்து இந்தளவிற்கு ஸ்கோர் செய்ததே பெரிய விஷயம்.
மேலும் எங்கள் அணியிலுள்ள இளம் வீரர்களிடம் நாங்கள் கூறுவதே ஒன்றே உங்கள் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள். மேலும் கடைசிப் பந்தில் சரவணகுமார் எங்கே போடுவார் அதற்கு என்னமாதிரியான ஃபீல்டிங் செட் செய்வது என்று எனக்கு தெரிந்ததால் சரியான ஃபீல்டரை சரியான இடத்தில் நிறுத்தினேன் அதற்கான பலன் கிடைத்தது" என்று அஷ்வின் பேசினார்