பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் மறைந்த ஜாம்பவான் வீரரான ஷேன் வார்னேவை போலவே கடைசி வரை இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் ஒரு முறை கூட கேப்டன்சி செய்ய வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் சீனியர் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் நாளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் அஸ்வின் தான்.

இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு அஸ்வினின் மோசமான செயல்பாடும் ஒரு காரணம். அதேபோல் அஸ்வினின் இடத்தை எளிதாக வாஷிங்டன் சுந்தரால் நிரப்ப முடியும் என்று புரிந்த சில போட்டிகளிலேயே ஓய்வை அறிவித்து சென்றுள்ளார்.
இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகள், 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகள், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகள் என்று ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதேபோல் பேட்டிங்கிலும் 4,394 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக அஸ்வின் இருந்திருக்கிறார்.
ஆனால் இந்திய அணியின் கேப்டன் பதவியோ அல்லது துணைக் கேப்டன் பொறுப்பையோ கூட அஸ்வினுக்கு பிசிசிஐ வழங்கியதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அறிவுப்பூர்வமான கிரிக்கெட் வீரர்களில் அஸ்வின் எப்போதும் உச்சத்தில் இருப்பார். இருந்தாலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் எப்படி கடைசி வரை ஷேன் வார்னேவுக்கு கேப்டன்சியை கொடுக்கவில்லையோ, அதேபோல் அஸ்வினுக்கு பிசிசிஐ வழங்கவில்லை.
விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகிய போது பலரும் அஸ்வினுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ அப்போதும் கூட அனுபவமில்லாத ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் பக்கமே சென்றது. இதனால் இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமை கடைசி வரை அஸ்வினுக்கு கிடைக்கவில்லை என்பது ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.