போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் வீசிய பந்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து என்று வார்னேவை எப்படி ரசிகர்கள் புகழ்வார்களோ.
அதைப்போல் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையிலே அவர் வீசிய சிறந்த பந்து இதுவாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் இந்திய அணியில் ரோகித் சர்மா 80 ரன்களும்,ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுக்க விராட் கோலி அபாரமாக விளையாடி 121 ரன்கள் சேர்த்தார். அதேபோன்று ஜடேஜா 61ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் விளாச, இந்திய அணி 438 ரன்களை குவித்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கும் நல்ல பலன் கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பாயும் தளவாணியும் மட்டும்தான் எடுத்து வரவில்லை. மற்றபடி களத்தில் அப்படியே படுத்து தூங்கி விட்டார்கள். தேஜ் நரைன் சந்தர்ப்பால் 95 பந்துகளை எதிர் கொண்டு 33 ரன்கள் தான் சேர்த்தார். இதேபோன்று அறிமுக வீரராக களம் இறங்கிய மெக்கன்சி 57 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இவர்களை அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர் பிராத்வெயிட் டெஸ்ட் கிரிக்கெட் க்கு ஏற்ற வகையில் அவர் விளையாடினாலும் இதை பார்த்த ரசிகர்கள் தூங்கியே விட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு பொறுமையான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

இமயமலை போல் நின்று இந்திய வீரர்கள் வீசிய பந்தை தடுத்து வெறுப்பேற்றினார். 235 பந்துகளை எதிர்கொண்ட அவர் 75 ரன்கள் மட்டும் தான் சேர்த்தார். ஸ்ட்ரைக் ரேட் 31 என்ற அளவில் தான் இருந்தது. இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.பிராத்வெயிட் இன்று அவுட் ஆக மாட்டார் என ரசிகர்கள் நினைத்தனர். அப்போதுதான் தமிழக வீரர் அஸ்வின் தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தினார்.
பிராத்வெயிட் ஸ்டெம்பை மறைத்துக் கொண்டு விளையாடி அதை உற்று நோக்கிய அஸ்வின் பந்தை வேகமாக அப்சைடில் வீசி அது சட்டென்று பாம்பு போல் திரும்பி ஸ்டம்பை படம் பார்த்தது. தாம் எப்படி ஆட்டம் இழந்தோம் என்பதை பிராத்வெயிட் களத்திலே நின்று ஆச்சரியமாக பார்த்தார். அஸ்வினின் இந்த பந்தை அவர் வீசியதிலே சிறந்த ஒன்று என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.