
சௌதாம்ப்டன் : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா தன் மூன்றாவது தோல்வியை நேற்று பதிவு செய்தது. 60 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்துள்ளது இந்தியா.
நான்காம் டெஸ்டில் ஆப்-ஸ்பின்னர் மொயீன் அலியின் சுழல் பெரிய அளவில் வேலை செய்தது. அவர் மொத்தமாக 9 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். அதே சமயம், இந்தியாவின் ஆப்-ஸ்பின்னர் அஸ்வின் பெரிய அளவில் விக்கெட்கள் வீழ்த்தவில்லை.

இதை வைத்தே, இந்தியாவின் தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என ஒரு புறம் பேச்சு கிளம்பியுள்ளது. மொயீன் அலி பயன்படுத்திய நுணுக்கத்தை ஏன் அஸ்வின் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அது என்ன நுணுக்கம்? :
முதல் நாள் ஆடுகளத்தில் சில இடங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன. சுழலுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காத இந்த ஆடுகளத்தில், மொயீன் அலி சாதித்த ரகசியமும் அதுதான். அவர், பந்தை சரியாக அந்த சேதமான பகுதியில் பிட்ச் ஆகுமாறு வீசினார். அதனால், பந்து திரும்பத் தொடங்கியது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்தை கணிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதனால், தவறான ஷாட்கள் ஆடி ஆட்டமிழந்தனர்.
மொத்தம் 9 விக்கெட்கள் :
இந்த முறையில் ஆடுகளத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மொயீன் அலி 9 விக்கெட்கள் வீழ்த்தினார். முதல் இன்னிங்க்ஸில் 5 மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அஸ்வின் 3 விக்கெட்கள் மட்டுமே :
மறுபுறம் அஸ்வின் சுழல் ஓரளவு ஈடுபட்டாலும், விக்கெட்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக மொயீன் அலி பயன்படுத்திய நுணுக்கத்தை அஸ்வின் பயன்படுத்தவில்லை. அவர் சேதமான பகுதியில் பந்தை வீசவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இவர் பந்துவீச்சில் தடுத்தாடத் தொடங்கினர். அதில் வெற்றியும் பெற்றனர். அஸ்வினால் மூன்று விக்கெட்கள் மட்டுமே மொத்தமாக எடுக்க முடிந்தது.
இரண்டாம் இன்னிங்க்ஸில் மோசம் :
இரண்டாம் இன்னிங்க்ஸில் வெறும் 1 விக்கெட் தான் எடுத்தார். இத்தனைக்கும் அவருக்கு தான் அதிக ஓவர்கள் கொடுக்கப்பட்டன. 37 ஓவர்கள் வீசி 84 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.
அஸ்வினின் இந்த சுழல் தோல்வி, இந்தியாவின் தோல்வியாக மாறியது. ஆனால், அஸ்வின் மட்டுமே இந்த தோல்விக்கு காரணம் என கூற முடியாது. இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காததே தோல்விக்கு முக்கிய காரணம்.