கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக கம்பீர் நீக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் ஆர்.அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில், முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்கான அணியை நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.இதில் காயம் காரணமாக கெளதம் கம்பீர் இடம் பெறவில்லை. அதேபோல, தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்பஜன் சிங்கும் அணியில் இடம் பெறவில்லை. யுவராஜ் சிங் காயம் காரணமாக பரிசீலிக்கப்படவே இல்லை.ஆல் ரவுண்டர் யூசுப் பதான், மும்பை ஆல் ரவுண்டர் அபிஷேக் நய்யார் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.அதேபோல வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் குமாரும் மீண்டும் வந்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக தமிழக வீரர் ஆர்.அஸ்வின், அமீத் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஸ்வின் மட்டுமே அணியில் புதுமுகம் ஆவார். இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஜெய்ப்பூரில் பிப்ரவரி 21ம் தேதியும், 2வது போட்டி குவாலியரில் பிப்ரவரி 24ம் தேதியும் நடைபெறும்.3வது மற்றும் கடைசிப் போட்டி பிப்ரவரி 27ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.அணி விவரம்:டோணி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், விராத் கோலி, திணேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், ஜாகிர் கான், ஆசிஷ் நேஹ்ரா, சுதீப் தியாகி, பிரவீன் குமார், அபிஷேக் நய்யார், யூசுப் பதான், அமீத் மிஸ்ரா.