மும்பை: இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித் ராணா மீது பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், அஸ்வின் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். சோசியல் மீடியாவில் ரசிகர்களே இல்லாத வீரரை குறி வைத்து பலரும் விமர்சிப்பதாக கூறிய அஸ்வின், ஹர்சித் ராணா குமுறுபவர்கள் அவர் சிறப்பாக விளையாடும் போது கூட பாராட்டுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான கிரிக்கெட் அணிகளிலும் ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டு வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும், ஹர்சித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஹர்சித் ராணாவை இந்திய அணியில் தேர்வு செய்வதற்கு கிரிக்கெட் ஜாம்பவான் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ஹர்சித் ராணாவின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய ஸ்ரீகாந்த், அவரை இந்திய அணியில் சேர்க்கக் கூடாது என்றும் ஆவேசமாக கூறினார். கிரிஸ் ஸ்ரீகாந்தின் கருத்துக்களுக்கு பயிற்சியாளர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
உங்களின் யூட்யூப் வ்யூஸ்-க்காக 23 வயது இளம் வீரரை கிண்டல் செய்யாதீர்கள்.. தேவையென்றால் என்னை விமர்சித்துக் கொள்ளுங்கள் என்றார். இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் பேசுகையில், இந்திய அணியில் நடக்கும் நல்ல விஷயங்கள் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரின் பெயர்களில் எழுதப்படுகிறது.
ஆனால் விமர்சனங்கள், திட்டுகள் எல்லாம் ரசிகர்களே இல்லாத வீரர்களை நோக்கி செல்கிறது. இப்போது ஹர்சித் ராணாவை சோசியல் மீடியாவில் வைத்து குமுறுகிறார்கள்.. இப்படி குமுறுபவர்கள், ஹர்சித் ராணா சிறப்பாக விளையாடும் போது உச்சத்தில் வைத்து பேச வேண்டும் அல்லவா.. ஆனால் அதனை செய்ய மறுக்கிறார்கள். விவேக் சொன்னது போல் அவன் படிப்பான்.. இவன் தொடப்பான் என்பது மாதிரி இருக்கிறது.
பாராட்டுவதற்கு சில வீரர்களையும், விமர்சிக்கவும், அடிக்கவும் சில வீரர்களையும் வைத்துள்ளீர்கள். கேட்க ஆளில்லாததால் ஹர்சித் ராணாவை விளாசி வருகிறார்கள். எப்போது யாரையும் அவதூறு செய்யாதீர்கள்.. ஏனென்றால் அது எப்போது உங்களுக்கும், உங்களின் குடும்பத்திற்கு எதிராகவும் திரும்பும் என்று தெரியாது. உங்களை நோக்கி வராது என்று நினைக்கும் போது, உங்கள் முன் வந்து நிற்கும்.
கர்மா ஒரு பூமராங்.. எந்த வீரரையும் தரக்குறைவாக பேசக் கூடாது என்று எப்போதும் சொல்லி வருகிறேன். எப்போதும் அட்டாக்கை பெர்சனலாக மாற்றும் போது, அது வேறு மாதிரி மாறிவிடுகிறது. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் என் மீது ஏராளமான விமர்சனங்களை வைத்திருக்கிறார். ஆனால் ஒருநாளும் அவர் மீது கோபம் வந்ததே இல்லை. அவர்கள் சில விமர்சனங்களை, தெரிந்த விஷயங்களை கருத்தாக கூறுகிறார்கள்.
அது பெர்சனலாக மாறாத வரை, எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நாம் பேசியதை ஹர்சித் ராணா பார்க்கும் போதோ, அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் பார்க்கும் போதே உடைந்துவிட மாட்டார்களா.. ஹர்சித் ராணாவின் திறமை, செயல்பாடுகள், பயிற்சி ஆகியவை பற்றி தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் பெர்சனல் அட்டாக்காக மாறக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.