மும்பை: இங்கிலாந்து நாட்டின் செல்வந்தர்களில் ஒருவர் சாம் பில்லிங்ஸ் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வேலையாட்கள் வைத்துக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல என்று கூறிய அஸ்வின், கென்ட் நகரின் பாதி சொத்துக்கள் அவருடையது என்றும் ஆச்சரியம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2018 மற்றும் 2019 ஆகிய சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக ஆடியவர் சாம் பில்லிங்ஸ். 2018ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 56 ரன்களை விளாசியவர் சாம் பில்லிங்ஸ். ஆனால் கன்சிஸ்டன்சி பிரச்சனை காரணமாக சாம் பில்லிங்ஸால் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாட முடியவில்லை.

சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான சாம் பில்லிங்ஸ், ஐஎல்டி20 தொடரில் சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த நிலையில் சாம் பில்லிங்ஸ் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் அஸ்வின் பேசுகையில், சாம் பில்லிங்ஸ் நாம் நினைப்பதை போல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. கென்ட் நகரின் பாதி சொத்து அவருடையது தான்.
இந்தியாவில் சமையல் செய்வதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும் ஆட்களை வைப்பது சாதாரண விஷயம். ஆனால் இங்கிலாந்தில் அது அவ்வளவு எளிதல்ல. வீட்டில் சமையலுக்கு ஆள் வைப்பதே பெரிய விஷயம். ஆனால் சாம் பில்லிங்ஸ் வீட்டில் வீட்டை சுத்தம் செய்வதற்கும், துணி துவைப்பதற்கும் தனித் தனியாக வேலையாட்கள் இருப்பார்கள்.
சாம் பில்லிங்ஸ் அப்படியான பின்னணியில் இருந்து வந்தவர் தான். ஆனால் சாம் பில்லிங்ஸ் ஒருநாளும் பெரிய பணக்காரர் என்பதை போல் நடந்து கொண்டதே கிடையாது. மிகவும் எளிமையாக இருப்பார். அதேபோல் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் இருக்கிறது. ஒரு வெளிநாட்டு வீரரை ஒரு அணி வாங்கினால், அவர் சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.
அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும். 2 அல்லது 3 போட்டிகளில் மோசமாக ஆடினால் கூட, அவர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். சாம் பில்லிங்ஸ் டி20 கிரிக்கெட்டை தவிர, ஒருநாள் மற்றும் டெஸ்டில் சிறப்பாக ஆடி இருக்கிறார். அவ்வளவு ஏன், ஐஎல்டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வந்துள்ளார். ஆனால் கன்சிஸ்டன்சி பிரச்சனை இருக்கிறது. அதனால் சாம் பில்லிங்ஸ் அணியில் தொடர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.