கொழும்பு : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேடலுக்கு பல ஆண்டுகளுக்கு பின் முடிவு கட்டியவர் பாண்டியா. இந்திய அணி ஜாம்பவான் கபில் தேவுக்கு பின், வேறு எந்த ஆல்-ரவுண்டரும் வேகப் பந்து வீசும் வீரராக இருக்கவில்லை.
அந்த குறையை ஹர்திக் பாண்டியா போக்கினார். ஆனாலும், முதன்முதலில் இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியாவுக்கும் இப்போது இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் பாண்டியாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

முன்பு வெறுமனே அதிரடி பேட்டிங் மட்டும்தான் செய்வேன் என அடம் பிடித்த பாண்டியா, இப்போது போட்டியின் சூழலுக்கு ஏற்ப தன் பேட்டிங்கை மாற்றிக் கொள்கிறார். அதே போல, பந்துவீச்சில் முன்பு விக்கெட் எடுத்தாலும் ரன்களை வாரிக் கொடுப்பார். அந்த குறையையும் இப்போது நிவர்த்தி செய்துள்ளார்.
அது மட்டுமின்றி, அவரது பந்துவீச்சு ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் போலவே மாறி உள்ளது. பல பந்துவீச்சு டெக்னிக்குகளை அவர் போட்டிகளில் செயல்படுத்துவதை பார்க்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியா குறித்து சிலாகித்து பேசி இருக்கிறார். இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராடு-உடன் ஒப்பிட்டு அவரது பந்துவீச்சை புகழ்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனும், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான பாபர் ஆசாமை, பாண்டியா பவுல்டு அவுட் செய்ததை அஸ்வின் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார். அது அத்தனை எளிதான விஷயமல்ல. அந்த பந்து ஒரு மேஜிக் போல இருந்ததாக போட்டி வர்ணனைகளில் கூட பலரும் குறிப்பிட்டு இருந்தனர்.
"ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்கிறார். அதை சர்வதேச போட்டிகளிலும் இப்போது செயல்படுத்தி வருகிறார். என்ன நடக்கிறது? பாபர் ஆசாமுக்கு அவர் வீசிய பந்து ஸ்விங் போல அல்லாமல் ஸீம் வகையில் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டூவர்ட் பிராடு என்ன செய்கிறாரோ அதை பாண்டியா இங்கே செய்கிறார்." எனக் குறிப்பிட்டு அவரை அடுத்த ஜாம்பவான் என்ற அளவுக்கு பாராட்டி பேசினார் அஸ்வின்.