மும்பை: நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான டிம் செய்ஃபெர்ட்டை சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். நியூசிலாந்து வீரர் என்பதோடு மட்டுமல்லாமல் அனுபவம் வாய்ந்த தொடக்க வீரர் என்பதால், சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் அவரை வாங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறியதால், தோனி கேப்டன்சியை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இதன்பின் உடனடியாக ஆயுஷ் மாத்ரே, டுவால்ட் பிரெவிஸ் மற்றும் உர்வில் படேல் ஆகிய மூவரும் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இதன்பின் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இதனிடையே ஐபிஎல் மினி ஏலத்திற்காக சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது. ஏற்கனவே அஸ்வின் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், சிஎஸ்கே அணி பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே திட்டங்கள் குறித்து பேசுகையில், நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட்டை சிஎஸ்கே அணி வாங்க முயற்சிக்கும் என்று ஒரு சிறிய யோசனை தோன்றுகிறது. சிஎஸ்கே அணியின் வரலாற்றை பார்த்தால், தொடக்க எப்போதும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஒருவேளை கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இல்லாமல் வேறு ஒரு பாதையில் சிஎஸ்கே அணி செல்ல வேண்டும் என்று நினைக்கலாம்.. அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எப்போதும் நியூசிலாந்து கனெக்ஷன் இருக்கிறது. டிம் செய்ஃபெர்ட்டிடம் ஒரு அனுபவம் இருக்கிறது. மிகச்சிறந்த ஃபீல்டர் என்பதில் சந்தேகமே இல்லை. விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர்.
எப்போதெல்லாம் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறாரோ, அப்போதெல்லாம் அசத்தி இருக்கிறார். ஒருவேளை சிஎஸ்கே அணி அவரை வாங்கவில்லை என்றாலும், வேறு சில அணிகள் வாங்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஸ்ரேயாஸ் கோபாலை சிஎஸ்கே அணி பயன்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் காமெடிக்காக சொல்லவில்லை. அவர் மிகச்சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பின் லெக் பிரேக் வீச தொடங்கி இருக்கிறார். லெந்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். கடந்த ஆண்டிலேயே பயிற்சியில் தீவிரமாக இருந்தார். ஸ்ரேயாஸ் கோபால் தலைமையில் மங்களூர் டிராகன்ஸ் அணி மகராஜா டிராபியை வென்றிருக்கிறது. அதற்கு ஸ்ரேயாஸ் கோபாலின் பவுலிங்கும் முக்கியக் காரணம். அதனால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக ஸ்ரேயாஸ் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.