சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் எடுக்க நினைக்கிறார்களா இல்லையா என ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியவில்லை. 15 விக்கெட்டுகள் வரை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

அதிலும் ஐந்து விக்கெட்டுகளை ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே முதல் இன்னிங்ஸில் வீழ்த்தி இருந்தார். பிரசித் கிருஷ்ணா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதிக ரன்களை வாரி இறைத்திருந்தார்.
இந்த நிலையில்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டிருக்கிறார். அவரை அணியில் சேர்க்காத பட்சத்தில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா இல்லையா என அஸ்வின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுபற்றி அவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "நான் கௌதம் கம்பீர் மற்றும் சுப்மன் கில் இடம் இந்தக் முக்கியமான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருக்கிறதா? இந்த டெஸ்ட் போட்டி அதை நமக்கு வெளிப்படுத்தும். நீங்கள் உண்மையாகவே 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால், குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நினைக்க வேண்டும். குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும். அந்த ஆடுகளத்தில் புற்கள் இல்லாமல் இருந்தால் அவர் நிச்சயம் ஆட வேண்டும்.
நீங்கள் யாரை வேண்டுமானாலும் அணியில் இருந்து நீக்கலாம், ஆனால் குல்தீப் யாதவ் நிச்சயம் அணியில் இடம் பெற வேண்டும். அவர் இருந்தால் இங்கிலாந்து அணியின் பின்வரிசை வீரர்கள் அதிக ரன்களை சேர்க்க மாட்டார்கள். அவர் உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுப்பார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிறைய சிக்கலை ஏற்படுத்துவார்.
ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டால், பிரசித் கிருஷ்ணாவை அணியில் தக்கவைக்க வேண்டும். ஏனெனில் அவர் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தன்னால் விக்கெட் வீழ்த்த முடியும் என்பதைக் காட்டினார். அர்ஷ்தீப் சிங்கை இடதுகை பந்துவீச்சாளர் என்பதற்காக அணியில் சேர்க்கலாம், ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரூபிக்கப்பட்ட வீரர் இல்லை. அந்த இடத்தில் தான் ஆகாஷ் தீப்பை நாம் நம்பலாம். ஜஸ்பிரித் பும்ரா விளையாடாத பட்சத்தில் அவரது இடத்தில் அர்ஷ்தீப் சிங் அல்லது ஆகாஷ் தீப்பை ஆட வைக்கலாம்," என்று கூறினார் அஸ்வின்.