பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியுடன் பயணிக்க ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்கம் முதலே விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிரந்தர இடம் வேண்டும் என்று அஸ்வின் நிபந்தனை விதித்திருந்த நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டெஸ்ட் போட்டியிலேயே அவரை நீக்கியது ஓய்வு பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிற்கு குட் பை கூறியுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென அஸ்வின் 3வது போட்டிக்கு பின் ஓய்வை அறிவித்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்கையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வி அஸ்வினை மனதளவில் பாதிப்படைய செய்துள்ளது.
இதன்பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வந்துள்ளது. ஆனால் அஸ்வின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாட விரும்பவில்லை. இதற்கான காரணம் குறித்து அறிந்த போது, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் நிரந்தர இடத்தை கோரி இருக்கிறார்.
இதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த போது, பெர்த் மைதானத்தில் ஆடப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது கம்பீரின் முடிவு என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே பெர்த் டெஸ்ட் போட்டிக்கு பின் உடனடியாக ஓய்வு பெறும் முடிவை அஸ்வின் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு தாமதமாக வந்ததால், அவருடன் அஸ்வின் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பின் அஸ்வினை சமாளித்து அடிலெய்டில் நடந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்துள்ளனர். இதன்பின் காபா டெஸ்டில் அஸ்வின் தேர்வு செய்யப்படாததால், அஸ்வின் ஓய்வுபெறும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
அடிலெய்டு டெஸ்டில் அஸ்வினை வற்புறுத்தி விளையாட வைத்த சம்பவத்தை கேப்டன் ரோஹித் சர்மாவே ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அஸ்வினின் சுயமரியாதைக்கு பிரச்சனை வந்ததன் காரணமாகவே அவர் உடனடியாக ஓய்வை அறிவித்து வெளியேறி இருப்பது உறுதியாகியுள்ளது. இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவானை, கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா மோசமான மனநிலையில் ஓய்வு பெற வைத்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.