அகமதாபாத்: இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கருக்கு நிகரான வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று கூறியுள்ள கபில் தேவ், நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் அவரை மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும் அனுப்பி வைத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பாதியிலேயே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட மெல்போர்ன் செல்வதற்கு முன்பாகவே, ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக சென்னை திரும்பி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இதனால் அஸ்வினின் ஓய்வு அறிவிப்புக்கு பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா காரணமாக பார்க்கப்படுகிறது. நம்பர் 1 ஸ்பின்னராக இருந்த போதும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து நிரந்தர இடம் மறுக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு 3 போட்டிகளுக்கும் ஒருமுறை அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு கொண்டே இருந்தார்.
குறிப்பாக வெளிநாடுகளில் அஸ்வின் மிகச்சிறப்பாக செயல்பட்ட போதும், அவரை மீண்டும் மீண்டும் பெஞ்ச் செய்தது திடீர் ஓய்வு அறிவிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இதில் முன்னாள் வீரர்களிடையே ரசிக்கப்படவில்லை. இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவானுக்கு மிகச்சிறந்த ஃபேர்வெல்லை பிசிசிஐ கொடுத்திருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அஸ்வினின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் பேசுகையில், வாழ்க்கையை பொறுத்தவரை ஒரு தலைமுறையை விடவும் அடுத்த தலைமுறை மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் உலகம் முன்னேற்ற பாதையில் செல்ல முடியாது. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கருக்கு அருகில் ஒரு வீரர் கிரிக்கெட்டில் சாதிப்பார் என்று கற்பனை கூட செய்ததில்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின் இரு வீரர்களுக்கும் அருகில் வந்திருக்கிறார். தற்போது அவரும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் நான் இந்திய அணியுடன் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் இருந்திருந்தால், அஸ்வினை இப்படி சாதாரணமாக அனுப்பி இருக்க மாட்டேன். அவருக்கு உரிய மரியாதையுடனும், மகிழ்ச்சியுடனும் அனுப்பி வைத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ நிர்வாகத்தை பொறுத்தவரை இந்திய அணிக்காக சாதித்த சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி என்று யாருக்கும் அவர்களுக்கு உரிய ஃபேர்வெல் போட்டியை நடத்தியதில்லை. அது தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் நடந்திருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.