மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாதியில் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதை தவறான முடிவு என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் அஸ்வின் இந்த முடிவை அறிவித்திருக்கிறார். இந்த மூன்று டெஸ்டில் அஸ்வின் இரண்டாவது டெஸ்டில் மட்டும்தான் விளையாடினார்.

இந்த நிலையில் அஸ்வினின் ஓய்வு குறித்து பேசிய கவாஸ்கர், இந்த தொடர் முடிவடைந்த பிறகு நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அஸ்வின் கூறி இருந்திருக்கலாம். ஆனால் இவர் பாதியிலே ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 2014- 15 பார்டர் கவாஸ்கர் தொடரில் இதேபோல்தான் தோனியும் பாதியில் செல்வதாக அறிவித்தார்.
அதே பாணியை தற்போது அஸ்வினும் செய்துள்ளார். இப்படி வீரர்கள் பாதியில் ஓய்வு பெறுவதன் மூலம் அணியில் ஒரு முக்கிய வீரர் குறைவார்கள். சில காரணங்களுக்காக தான் தேர்வு குழுவினர் பல வீரர்களை வெளிநாட்டு தொடருக்கு அனுப்புகிறார்கள். ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அணியில் இருக்கும் கூடுதல் வீரர்களை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரலாம்.
உதாரணத்திற்கு சிட்னி டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளருக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும். இந்திய அணி அங்கு இரண்டு ஸ்பின்னர் வைத்து விளையாடக்கூடும். யாருக்கு தெரியும் அஸ்வின் அதில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கலாம். மெல்போர்னில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடுகளம் குறித்து எனக்கு தெரியவில்லை.
ஆனால் இது போன்ற முக்கிய முடிவுகளை தொடரில் இறுதியில் தான் எடுக்க வேண்டும். நடுவில் எடுப்பது சரி கிடையாது. வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் முன்னுரிமை அளிக்க பட்டதை அடுத்து அஸ்வின் இந்த முடிவு எடுத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் அஸ்வின் ஒரு மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்திருக்கிறார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.