பிரிஸ்பேன்: இந்திய அணிக்காக அறிமுகமான டெஸ்ட் போட்டியில் இருந்து 14 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியை கூட தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிஸ் செய்ததில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த 14 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடியுள்ள 65 போட்டிகளிலும் அஸ்வின் விளையாடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணி சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 537 விக்கெட்டுகளையும், 3,503 ரன்களையும் விளாசி இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக விளையாடிய அஸ்வினுக்கு, ரசிகர்கள் பிரியாவிடை அளித்துள்ளனர்.

இருந்தாலும் அஸ்வினுக்கு சொந்த மண்ணில் ஃபேர்வெல் டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் அரிதாகி வரும் ஆஃப் ஸ்பின்னை அடுத்த தலைமுறைக்கு தனது சாதனைகள் மற்றும் திறமை மூலமாக அஸ்வின் கடத்தி இருக்கிறார். இதனால் இந்திய ஜாம்பவான்களின் பெயர்களில் அஸ்வினின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.
சச்சினுக்கு பின் இந்திய அணியின் மிகச்சிறந்த மேட்ச் வின்னராக அஸ்வின் செயல்பட்டு வந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனிடையே அஸ்வின் குறித்த ஆச்சரியமான தகவல் தெரிய வந்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் 2011ஆம் ஆண்டு நம்பர் 6ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகினார்.
அப்போது முதல் இந்தியாவில் 65 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி இருக்கிறது. இந்த 65 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் ஒரு போட்டியை கூட மிஸ் செய்ததில்லை. அதாவது 14 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியை ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருமுறை கூட தவறவிட்டதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் வியப்பை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக சொந்த மண்ணில் அறிமுகமான டெஸ்ட் போட்டி முதல் கடைசி டெஸ்ட் போட்டி வரை ஒரு போட்டியை கூட மிஸ் செய்யாமல் விளையாடிய வீரர்களின் பட்டியலில் அஸ்வின் 2வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன்பாக இங்கிலாந்து ஜாம்பவான் அலைஸ்டர் குக் 12 ஆண்டுகளில் 89 டெஸ்ட் போட்டிகளை மிஸ் செய்யாமல் விளையாடி இருக்கிறார்.
இந்த பட்டியலில் டாப் 5ல் வேறு எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சென்னை ரசிகர்கள் மறக்க முடியாத ஃபேர்வெல்லை அடுத்த சில ஆண்டுகள் வழங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. எப்படி தோனி ஓய்வு பெற்ற போதும் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்களோ, அதேபோல் அஸ்வினையும் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.